மீன்பிடித் தொழிலுக்காக, ஈரான் சென்ற தமிழக மீனவர்கள் உணவின்றி தவிப்பதாக கண்ணீர் மல்க அவர்களின் குடும்பத்தினர் நாகை ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஈரான் நாட்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடித் தொழிலுக்காக சென்றுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஈரான் அரசு விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. இதனால், தமிழக மீனவர்கள் இந்தியா திரும்ப முடியாமல், தவிப்பதாகவும், முதல்கட்டமாக 50 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள மீனவர்களையும் மீட்கக்கோரி, அவர்களின் குடும்பத்தினர் நாகை ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
உணவு இல்லாமல் உப்புத் தண்ணீரை குடித்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில நாட்கள் இருந்தால் தங்களுக்கும் கொரோனா தொற்று வந்துவிடும் என மீனவர்கள் அச்சம் தெரிவித்ததாக அவர்களின் குடும்பத்தினர் கூறினர்.
ஈரானில் சிக்கியுள்ள மீனவர்கள் வீடியோ மூலம் கூறும்போது, அங்கு உணவு இல்லாமலும், கடல் நீரைக் காய்ச்சி குடிநீராகப் பயன்படுத்தி வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களை காப்பாற்றும்படி மத்திய அரசிடம் கோரிக்கையும் வைத்தனர்.