அமெரிக்காவுக்கு தண்ணி காட்டிய சீனா.. எச்சரிக்கையை மீறி ஹார்முஸை கடந்த கப்பல்.. ஈரான் கேலி!
அமெரிக்க ராணுவம் முற்றுகையிடத் தொடங்கிய ஈரானின் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இருந்து சீனாவின் எண்ணெய்க் கப்பல் வெளியேறி இருப்பது உலகளவில் பேசுபொருளாகி உள்ளது. அதுவும், இந்தப் பாதையிலிருந்து முதல் கப்பலாக சீனக் கப்பல் வெளியேறி இருக்கிறது.
நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ’ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக செல்லும் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அங்கு அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிடும்’ எனத் தெரிவித்தார். மேற்கு ஆசியா போருக்குப் பிறகு ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதி வழங்கிய நாடுகளுக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதாவது, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள அனைத்து ஈரான் துறைமுகங்கள் உட்பட கடலோர பகுதிகளில் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நாடுகளின் கப்பல்களும் எந்த பாரபட்சமின்றி தடுத்து நிறுத்தப்படும்.
இந்த முற்றுகை இந்திய நேரப்படி நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. முற்றுகை நடவடிக்கையைத் தொடர்ந்து ஈரான் தெற்குக் கடல் பகுதியில் இருந்து 200 கிமீ தொலைவில் ஓமன் வளைகுடாவில் அமெரிக்க அணு ஆயுதம் தாங்கிய ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலும், அத்துடன் மேலும் 2 போர்க் கப்பல்களும் நிறுத்தப்பட்டு கண்காணிப்பதாகச் செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் பல கப்பல்கள் சிக்கியுள்ளன. இந்தியக் கொடியேந்திய 15 கப்பல்கள் இன்னும் ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த 15 கப்பல்களில் பெரும்பாலும் சமையல் எரிவாயுவான எல்பிஜி ஏற்றப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்க ராணுவம் முற்றுகையிடத் தொடங்கிய ஈரானின் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இருந்து சீனாவின் எண்ணெய்க் கப்பல் வெளியேறி இருப்பது உலகளவில் பேசுபொருளாகி உள்ளது. அதுவும், இந்தப் பாதையிலிருந்து முதல் கப்பலாக சீனக் கப்பல் வெளியேறி இருக்கிறது. கடல்வழிப் போக்குவரத்துத் தரவுகளின்படி, ’ரிச் ஸ்டாரி’ என்ற நடுத்தர அளவு கொண்ட எண்ணெய் கப்பல், இன்று ஹார்முஸ் பகுதியை வெற்றிகரமாகக் கடந்து, தற்போது ஓமன் வளைகுடாவில் உள்ளது. மலாவி நாட்டுக் கொடியின்கீழ் பயணித்த அந்தக் கப்பலில் சீனக் குழுவினர் இருப்பதாக அறிவித்த பிறகு, அது ஹார்முஸ் வழியைக் கடந்துள்ளது.
இந்த முதல் முற்றுகையை அமெரிக்கா அமல்படுத்துவதற்கு மிகவும் சவாலாக இருந்ததாகக் கூறப்படுகிறது. காரணம், அந்த சீன எண்ணெய்க் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிப்பதற்கு முன்பு ஈரானியத் துறைமுகங்களுக்குச் சென்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரத்தில், ட்ரம்பின் அச்சுறுத்தல்களையும் மீறி, சீனாவுடன் தொடர்புடைய ஒரு கப்பல் ஹார்முஸ் வழியாக கடந்திருப்பது அமெரிக்காவிற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, எரிசக்தித் தடைகளைத் தவிர்க்க ஈரானுக்கு உதவியதற்காக இந்தக் கப்பலைத்தான் அமெரிக்கா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கறுப்புப் பட்டியலில் சேர்த்திருந்தது. இந்தக் கப்பல், ஷாங்காய் சுவான்ருன் ஷிப்பிங் கோ லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. தற்போது இந்தக் கப்பலில், சுமார் 2,50,000 பேரல் மெத்தனால் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும், அந்த சரக்கை, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்தில் அது ஏற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தக் கப்பலைத் தவிர, பனாமா கொடியிடப்பட்ட பீஸ் கல்ஃப் மற்றும் முர்லிகிஷன் ஆகிய இரண்டு கப்பல்களும் இன்று ஹார்முஸ் பகுதியைக் கடந்து சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் முர்லிகிஷன் கப்பல் இதற்கு முன்பு ரஷ்ய மற்றும் ஈரானிய எண்ணெய்யை ஏற்றிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஹார்முஸைத் தடுப்பதற்கான ட்ரம்பின் நடவடிக்கை, சீனா போன்ற முக்கிய எண்ணெய் இறக்குமதி நாடுகளுடன் மோதல்கள் ஏற்படும் அபாயங்களை அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். காரணம், இந்தக் கடல்வழிப் பாதையாகச் செல்லும் எண்ணெய்யில் சுமார் 38% மற்றும் திரவ இயற்கை எரிவாயுவில் (LNG) 25%, உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான சீனாவிற்கே செல்கிறது. இது சீனாவின் கடல்வழி எண்ணெய் விநியோகத்தில் ஏறத்தாழப் பாதியைக் கொண்டுள்ளது. தவிர, ட்ரம்பின் இந்த நடவடிக்கையை ஏற்கெனவே சீனா கண்டித்துள்ளது. இதற்கிடையே சீன கப்பல் ஹார்முஸை வெற்றிகரமாகக் கடந்திருப்பதைப் பார்த்த ஈரான் அமெரிக்காவை கேலி செய்துள்ளது.

