கொள்ளையனை வசமாக பிடித்துக் கொடுத்த கொசுக்கள்! சீனாவில் விநோத சம்பவம்

கொள்ளையனை வசமாக பிடித்துக் கொடுத்த கொசுக்கள்! சீனாவில் விநோத சம்பவம்
கொள்ளையனை வசமாக பிடித்துக் கொடுத்த கொசுக்கள்! சீனாவில் விநோத சம்பவம்

தாங்கள் செய்யும் சிறு சிறு தவறுகள், விட்டுப்போன தடயங்கள் ஆகியவற்றின் மூலம் திருடர்கள் சிக்கிய சம்பவங்களை பார்த்திருக்கிறோம். ஆனால், சாதாரண கொச்சுகளின் மூலமாக ஒரு பலே திருடன் பிடிபட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம். உண்மையில் அப்படிப்பட்ட விசித்திர சம்பவம் சீனாவில் நடந்திருக்கிறது. அதுகுறித்து பார்ப்போம்.

தென் சீனாவின் ஃபியூஜியான் மாகாணத்தில் அமைந்துள்ளது ஃபுசோவ் நகரம். இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் யங் சென். இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இதனால் இவரது வீட்டில் சில நாட்களாக விளக்குகள் அணைந்திருந்ததை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு திருடன் நோட்டமிட்டிருக்கிறார். பிறகு அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருப்பது அவருக்கு தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, அவர்களின் வீட்டில் திருட முடிவு செய்து, கடந்த 10-ம் தேதி நள்ளிரவு அந்தக் குடியிருப்புக்கு சென்றிருக்கிறார். குடியிருப்பில் காவலாளிகள் இருந்ததால்  உள்ளே நுழைய முடியவில்லை. இதையடுத்து, குடியிருப்பின் பின்புறம் இருந்த கழிவுநீர் குழாயில் ஏறி, பால்கனி வழியாக அந்த வீட்டுக்குள்  நுழைந்துள்ளார். பிறகு வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, அதனை மூட்டையாக கட்டி வந்த வழியாகவே செல்ல தயாரானார். ஆனால் அந்த நேரத்தில் பசி  வயிற்றை கிள்ளி இருக்கிறது. இதையடுத்து, சாவகாசமாக நூடுல்ஸை சமைத்து வயிறு புடைக்க சாப்பிட்டிருக்கிறார். உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதைபோல, வயிறார சாப்பிட்டதால்  தூக்கம் கண்ணை சுற்றியிருக்கிறது. இதனால் ஏசியை போட்டு நன்றாக தூங்கிய திருடன், அதிகாலையில் கொள்ளையடித்த பொருட்களுடன் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளரான யங் சென் கடந்த 14-ம் தேதி வீட்டுக்கு வந்து பார்த்த போது, பீரோக்கள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில், போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

ஏதேனும் தடயத்தை திருடன் விட்டு சென்றிருக்கிறானா என சோதனை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்களும் கூட வரவழைக்கப்பட்டன. ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில்தான், படுக்கையறையில் உள்ள சுவற்றில் சிறிய ரத்தக்கறை இருப்பதை போலீஸார் கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது, இரண்டு கொசுக்கள் அந்த சுவற்றில் அடிபட்டு செத்திருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, அந்த உறைந்த ரத்தத் துகள்களை போலீஸார் சேகரித்து டிஎன்ஏ சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெரிய திருடர்களை பிடித்த போலீஸார் அவர்களின் ரத்த மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பினர். இந்த சூழலில், டிஎன்ஏ சோதனை முடிவுகள் நேற்று முன்தினம் வந்துள்ளது. அப்போது அதில் இருந்த டிஎன்ஏ, பிடிபட்ட ஒரு திருடனின் டிஎன்ஏவிடம் 100 சதவீதம் ஒத்துப்போனது. இதையடுத்து, அவரிடம் தங்கள் பாணியில் போலீஸார் விசாரணை நடத்தியதில், வீட்டில் திருடியதை  ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்ட போலீஸார், வீட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சமீபத்தில்தான் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. இதனால் ரத்தக்கறை மிகவும் தெளிவாக தெரிந்தது. மேலும், ரத்தத்தின் நிறத்தை வைத்து பார்த்தபோது சிறிது நேரத்துக்கு முன்பே அந்தக் கொசுக்கள் அடிக்கப்பட்டிருக்கலாம் என முடிவுக்கு வந்தோம். கிடைத்த தடயத்தை ஏன் விட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்த ரத்தத் துகள்களை சேகரித்து டிஏன்ஏ சோதனைக்கு அனுப்பினோம். ஆனால் நாங்கள் சந்தேகப்பட்டதை போலவே அது திருடனின் ரத்தம் என்பது உறுதியாகிவிட்டது. இப்போது கைது செய்துவிட்டோம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com