சீனாவில் இயல்பு நிலை திரும்புவதை குறிக்கும் விதமாக சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது.
கொரோனா என்ற வார்த்தை சீனாவில்தான் முதன்முதலாக ஒலித்தது. சீனாவில் தொடங்கிய கொரோனா இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகள் ஊரடங்கை அறிவித்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றன. தொடக்கக் காலத்தில் கொரோனாவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்திய சீனா தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. பல அதிரடி நடவடிக்கைகளால் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்த சீனா தற்போது இயல்புநிலையை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. அதனை குறிக்கும் விதமாக சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் வரத்தொடங்கியுள்ளது
சர்வதேச உழைப்பாளர் தினத்தையொட்டி சீனாவில் 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு இருந்து மீண்டுள்ள சீனா மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதை உணர்த்தும் வகையில் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களில் குவிந்துள்ளனர். சீனாவில் 70 சதவிகித சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே மக்கள் சுற்றுலாதலங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு மோசமாக ஆரம்பித்திருந்தாலும் அதிலிருந்து மீண்டது, நம்பிக்கையை அதிகரித்திருப்பதாக சீன மக்கள் கூறுகின்றனர்.