ஈரானுக்கு உதவிய சீன செயற்கை கோள்..? வெளியான அதிர்ச்சி தகவல்!
ஃபைனான்சியல் டைம்ஸ் தகவலின்படி, சீனாவின் Earth Eye Co உருவாக்கிய TEE-01B செயற்கைக்கோளை ஈரான் ரகசியமாக வாங்கி, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள், விமானப்படைத் தளங்கள், துறைமுகங்கள், மின்நிலையங்கள், அலுமினிய ஆலைகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை 2025 வரை கண்காணிக்கப் பயன்படுத்தி வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது; இது சீனாவின் மறைமுக ராணுவ ஆதரவு குறித்த சந்தேகங்களை அதிகரிக்கிறது.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டு வார இடைக்கால போர்நிறுத்தம் அமலான நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 11-ல் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது எந்த உடன்படிக்கையும் எட்டப்படாத நிலையில் ஈரான் ஹார்மூஸ் நீரிணையை முழுவதுமாக முடக்கியுள்ளது.
அதே வேளையில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி தலைமையிலான உயர்மட்டக் குழு, ஈரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்நிலையில் ஈரான் 2025ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ தளவாடங்களை கண்காணிக்க சீனாவில் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை கோளை ரகசியமாக வாங்கியிருப்பதாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
TEE-01B என அறியப்படும் இச்செயற்கைக்கோள், 'Earth Eye Co. எனும் சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர் ஈரான் வாங்கியுள்ளது.
'Earth Eye Co' நிறுவனம் in-orbit delivery எனப்படும், அதிகம் அறியப்படாத ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. இதன்படி, சீனாவில் ஏவப்பட்ட விண்கலங்கள், வெற்றிகரமாக சுற்றுப்பாதையை அடைந்த பின்னர் மற்ற நாடுகளுக்கு விற்கப்படுகிறது.
ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி அறிக்கையின்படி, செயற்கைக்கோள் சேவைகளை அளிக்கும் எம்போசாட் ( Emposat ) என்ற சீன நிறுவனத்தின் வலையமைப்பை அணுகுவதற்கான அனுமதியும் ஐ.ஆர்.ஜி.சி-க்கு அளிக்கப்பட்டிருந்தது . இந்த நிறுவனம் ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மேலும் பல நாடுகளுக்கும் செயற்கை கோள் சேவைகளை அளித்து வருகிறது.
மார்ச் 13, 14 , 15 ஆகிய தேதிகளில் சவூதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தின் படங்களை அந்த செயற்கைக்கோள் எடுத்ததாகக் கூறப்படுகிறது. மார்ச் 14 அன்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானங்கள் சேதமடைந்ததை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டார்.
ஐ.ஆர்.ஜி.சி தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட பகுதிகளில் அதே காலகட்டத்தில், அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் TEE-01B கண்காணித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
ஜோர்டானின் விமானப்படைத் தளம், பஹ்ரைன் மனாமா நகரில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள இடங்கள் மற்றும் ஈராக்கின் எர்பில் விமான (Erbil Airport) நிலையம், குவைத்தில் விமானப்படைத் தளம், ஓமான் சர்வதேச விமான நிலையம், ஐக்கிய அரபு அமீரகத்தில் துறைமுகம் மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு வளாகம், உலகின் மிகப்பெரிய அலுமினிய ஆலைகளில் ஒன்றான பஹ்ரைனின் அல்பா அலுமினிய ஆலை உட்பட, வளைகுடா முழுவதும் உள்ள உள்கட்டமைப்புகளையும் கண்காணித்துள்ளது.
இதன் மூலம் ஈரானியர்களுக்குச் சீனா உளவுத் தகவல்களை வழங்கி உதவி வருகிறது என்பதும், அதே வேளையில் அதில் அரசாங்கத்தின் நேரடித் தலையீடு இருப்பதை மறைக்க முயன்று வருவது தெளிவாக தெரிகிறது என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

