கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் சீனா: அரசின் நடவடிக்கையும், மக்களின் விழிப்புணர்வும்!!
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் வேளையில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் இது எப்படி சாத்தியமானது?
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவத்தொடங்கிய நாடு சீனா. கடந்த டிசம்பர் மாதம் எட்டாம் தேதி வுகான் மாகாணத்தில் முதல் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. ஜனவரி 14ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையையும் சீன அரசால் எடுக்க முடியவில்லை. தினமும் கொத்து கொத்தாக உயிரிழப்புகள் நிகழ்ந்தன. அதிகபட்சமாக ஒரே நாளில் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி உயிரிழப்பு 150ஆக இருந்தது. இது படிப்படியாக குறைந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி ஒற்றை இலக்க எண்ணில் உயிரிழப்பு பதிவானது. இதுவரை 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
தொற்றும் பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது என்பதை ஆராய்ந்த போது ஜனவரி மாதம் 23ஆம் தேதி முதல் கொரானாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் 93 கோடி மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டது தெரியவந்துள்ளது. தினமும் பரிசோதனை, பிற பகுதிகளுக்கு பயணிப்போர் தங்களில் விவரங்களை பகிரங்கமாக அறிவித்துச் சென்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஒரு வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வீடுகளுக்கு உணவு, மருத்துவமனைக்கு தேவையான மருந்துகளை விநியோகிக்கும் பொறுப்பை பெருமளவில் ஓட்டுநர்கள் மட்டுமே செய்தனர். உணவகங்களில் பாதுகாப்பான முறையில் தனி கேபின் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொலைத்தொடர்பு துறையும் பெருமளவில் கைகொடுத்தது. HEALTH CODE ASSIGN என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி மக்களின் நடமாட்டம் உடனுக்குடன் வெளியிட்டது. குறிப்பிட்ட பகுதியில் ஒரு நபர் எவ்வளவு நேரம் செலவிட்டிருக்கிறார் போன்ற தகவல்களை வெளியிட்டது. சில நிறுவனங்கள் FACIAL RECOGNITION எனப்படும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவருக்கு காய்ச்சல் இருக்கிறதா? முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா? எனக் கண்டறிந்தது.
கொரோனா தொற்று இருப்பவர்கள் பாதிப்பின் போது கடைபிடிக்க வேண்டியவற்றை மீறினால் மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை போன்ற கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு அறிவித்தது. பொறுப்பற்ற முறையில் விதிகளை மீறுவோரை கண்டுபிடித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
சீன மக்களின் ஒருங்கிணைந்த, விரிவான அணுகுமுறையே ஆயிரக்கணக்கானோரை கொரோனா பாதிப்பிலிருந்து மீட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் பாராட்டியுள்ளார். அரசின் கட்டுப்பாடுகளை மதித்து சரியான முறையில் நடந்துகொண்டதால் கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தப்ப முடியும் என்பதை சீன மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்