சீனா | வேலைநேரத்தைத் தாண்டி ஊழியருக்குப் பயிற்சி.. நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!
சீனாவைச் சேர்ந்தவர் வாங். இவர், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெய்ஜிங்கில் உள்ள பொறியியல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஜூன் 2023 வரை அதில் பணியாற்றினார். பின்னர் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். வேலை நேரத்தையும் தாண்டி ஆன்லைன் பயிற்சிகளில் கலந்துகொள்ளுமாறு நிறுவனத்தின் சார்பில் அவருக்கு பலமுறை கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படி, ஊழியர்கள் கலந்துகொள்ளத் தவறினால், ரூ. 2,400 அபராதம் விதிக்கப்படும் எனவும் நிறுவனம் மிரட்டியுள்ளது. இதனால், விரக்தியடைந்த வாங், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும், ரூ.9.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோரியிருந்தார். இதுதொடர்பாக, வாங் தனது பயிற்சி பதிவுகள் மற்றும் சக ஊழியர்களுடனான அரட்டை செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களை சமர்ப்பித்தார்.
இந்த விவகாரம் நீதிமன்றத்திகு வந்தபோது, ”ஊழியர்கள் உள்நுழைய மட்டுமே கட்டாயப்படுத்தப்பட்டனர், பேசவோ அல்லது தீவிரமாக பங்கேற்கவோ வேண்டாம்'' என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தொழிலாளர்கள் தொழில்நுட்ப ரீதியாக எந்த வேலையும் செய்யவில்லை. அபராத கொள்கைக்கும் பயிற்சி அமர்வுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், இவற்றைக் கவனமாகக் கண்டறிந்த நீதிமன்றம், வாங் தரப்பில் இருக்கும் நியாயத்தை அறிந்து அவருக்கு ஆதரவாக நீதி வழங்கியது. அவர் இழப்பீடு பெறத் தகுதியுடையவர் என தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு ரூ. 2.3 லட்சம் தொகை வழங்க நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. மேலும், அலுவலக நேரத்திற்குப் பிறகு செய்யப்படும் எந்தவொரு வேலையும் கூடுதல் வேலையாகக் கருதப்பட வேண்டும் என்றும், அந்த நேரத்திற்கு ஊழியருக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாகக் கூறியுள்ளது.
ஊழியர்களின் தனிப்பட்ட நேரம் என்பது முக்கியமானது, நிறுவனங்கள் அதை மதிக்க வேண்டும். வீட்டிலிருந்து அல்லது நெகிழ்வான வேலைகளில் அதிகமான மக்கள் வேலை செய்வதால், இந்த தீர்ப்பு உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். ஒருவர் தொலைதூரத்தில் வேலை செய்கிறார் என்பதற்காக, அவர்கள் எல்லா நேரங்களிலும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்பதை இது முதலாளிகளுக்கு நினைவூட்டுகிறது.