தொடரும் வர்த்தகப் போர்| 125% வரிவிதித்த ட்ரம்ப்.. சரிவைச் சந்தித்த சீன நாணயம்!
அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், வர்த்தக ரீதியாக அமெரிக்காவால் பல நாடுகள் ஆதாயம் அடைந்து வருவதாகவும், அதே அளவு பலன் அவர்களால் தங்கள் நாட்டிற்கு கிடைக்கவில்லை என்றும் கூறி வந்தார். இதையடுத்து சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் அதிக வரிவிதிப்பையும் மேற்கொண்டார். மேலும், பிற நாடுகள் தங்களுக்கு எந்த விகிதத்தில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதத்தில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (பரஸ்பர) வரி விதிக்கப்போவதாகவும் எச்சரித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமல்படுத்தினார். அதில், பிற நாடுகள் தங்கள் பொருள்கள் மீது விதிக்கும் வரி விகிதத்தை சற்றே குறைத்து, ‘தள்ளுபடி’ வரி விகிதங்களை ட்ரம்ப் வெளியிட்டாா். அந்த வகையில் சீனாவுக்கு 34 சதவீதம் வரி விதித்து ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
அதேநேரத்தில், அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும் பதிலுக்கு வரி விதித்தது. இதைத் தொடர்ந்து, ”தங்களுக்கு விதித்த பதில் வரியை சீனா திரும்பப்பெறாவிட்டால் அதற்கு கூடுதலாக 50% வரி விதிக்கப்படும்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்ததுடன், ஒருநாள் கெடுவும் விதித்திருந்தார். இதற்கு சீனா வர்த்தக அமைச்சகம், “இது வெறும் மிரட்டல். அமெரிக்க வரிவிதிப்பை எதிர்த்து சீனா இறுதிவரை போராடும்” எனப் பதிலளித்திருந்தது. இந்தச் சூழலில், அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது. இந்த வரிவிதிப்பு நேற்றுமுதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்காவின் வரிவிதிப்பிற்கு எதிராக இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருந்த சீனா, அமெரிக்க பொருட்களுக்கான வரி இன்றுமுதல் (ஏப்.10) முதல் 84% ஆக உயர்த்தப்படும் என பதிலடி கொடுத்தது.
இந்தச் சூழலில், உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்த டொனால்டு ட்ரம்ப், பரஸ்பர வரி விதிப்பில் பேஸ்லைன் வரியாக 10% வரி விதிப்பு 125%மட்டும் எல்லா நாடுகளுக்குமே தொடரும் எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், சீனாவுக்கான பரஸ்பர வரியை மட்டும் ட்ரம்ப் 125 சதவீதமாக அதிகரித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப், “உலக நாடுகளின் விருப்பங்களை மதித்து நாங்கள் புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். ஆனால் சீனா எங்களை மதிக்கவில்லை. எங்களின் பரஸ்பர வரிக்கு மேலும்மேலும் வரி விதிக்கிறது. இதனால் நாங்கள் சீனாவுக்கான வரியை 104 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக அதிகரித்துள்ளோம். நாங்கள் ஏற்கெனவே சீனாவுக்கு எச்சரித்திருந்தோம். ஆனால், சீனா அதை கேட்கவில்லை. நாங்கள் இப்போது அதன் மீதான வரியை 125 சதவீதமாக அதிகரித்துள்ளோம். எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் பலன் பெற முடியும். இல்லை, எதிர்த்து நின்றால், வரிவிதிப்பு எகிறும்” என எச்சரித்துள்ளார்.
மறுபுறம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பால் உலகின் பல நாடுகள் கடுமையான பொருளாதார பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நிலையில், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் நாணயமான ‘யுவான்’ மதிப்பு 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. ஒரே இரவில் நடந்துள்ள இந்தச் சரிவு, 2007 டிசம்பர் மதிப்புக்குப் பின் வரலாறு காணாதது. அமெரிக்க டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 7.3498 ஆகச் சரிந்துள்ளது. உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருவதால் இந்த சரிவுகள் ஏற்பட்டுள்ளன. எனினும், சீனா தனது உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க உறுதியான மற்றும் வலிமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக உறுதி அளித்துள்ளது.