மற்ற நாட்டு உள்விவகாரத்தில் தலையிட்டு மோதலை ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்துவதற்கான ஒரு ஆயுதமாக ஜனநாயகத்தை அமெரிக்கா பயன்படுத்துவதாக சீனா கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜனநாயகத்திற்கான மாநாடு என்ற பெயரில் சர்வதேச அளவிலான கூட்டத்தை அமெரிக்கா நடத்தியுள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட சுமார் 100 நாடுகள் பங்கேற்றன. மனித உரிமைகளை பாதுகாப்பது, தேர்தல்களை நியாயமாக நடத்துவது, லஞ்ச ஊழல்களை களைவது உள்ளிட்டவை குறித்து இம்மாநாட்டில் பேசப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடந்த இக்கூட்டத்திற்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் அழைப்பு விடப்படவில்லை. அதே நேரம் சீனாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து சுயாட்சி பகுதியாக செயல்பட்டு வரும் தைவானுக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா அழைப்பு விடுத்தது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இச்செயல் சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடுமையான விமர்சனங்களை அந்நாடு முன்வைத்துள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டும் அந்நாடு புறக்கணித்துவிட்டது.