தனி நாடாக பிரிந்து செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டலோனியா பிராந்திய தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ள ஸ்பெயின் அரசு, இது தொடர்பாக 6 நாட்களுக்குள் முடிவை அறிவிக்க வேண்டுமென கெடு விதித்துள்ளது.
ஸ்பெயின் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக கேட்டலோனியா பிராந்திய தலைவர் கார்லஸ், தனி நாடு அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியதை தொடர்ந்து, ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய், நேற்று அமைச்சரவையை கூட்டி அவசரமாக ஆலோசனை நடத்தினார்.
பின்னர் தனி நாடு முடிவை கைவிட வரும் 19-ம் தேதி வரை கேட்டலோனியா தலைவர்களுக்கு அவகாசம் அளிப்பதாக தெரிவித்த ரஜோய், ஒருவேளை எதிர்மறையான முடிவை மேற்கொண்டால் தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்துவிட்டு கேட்டலோனியாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.