அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சட்டவிரோதமாக குடியேற கனடாவில் அட்மிஷன்.. விசாரணையில் இறங்கிய ED!
குஜராத்தை சேர்ந்த 4 பேரின் உடல், கடந்த 2022ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றபோது, கனடா எல்லையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக அகமதாபாத் காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயலும் இந்தியர்களிடம், மும்பையைச் சேர்ந்த கல்வி நிறுவன முதல்வர் பவேஷ் 60 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு கனடாவிலுள்ள கல்லூரியில் அட்மிஷன் போட்டு மாணவர் விசா பெற்றுத் தந்துள்ளார்.
அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்க, மும்பை, நாக்பூரைச் சேர்ந்த 2 நிறுவனங்கள் கனடா கல்லூரிகளில் இந்தியர்களுக்கு அட்மிஷனுடன் மாணவர் விசா பெற்றுத்தந்து, சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையை கடக்க உதவியது தெரியவந்தது. 8 இடங்களில் நடத்திய சோதனையில் சம்பந்தப்பட்ட 2 கல்வி நிறுவனங்கள் மூலம் மட்டும் 35ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் கனடாவிலுள்ள கல்லூரிகளில் அட்மிஷன் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. இதில் கனடாவைச் சேர்ந்த 260 கல்லூரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாகவும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.