இந்தியா - கனடாபுதிய தலைமுறை
உலகம்
"வாங்க பேசிக்கலாம்.." இந்தியாவை அழைத்த கனடா
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் கொலை வழக்கில் நீதி வழங்குவதற்கு கனடாவுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டுமென அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “நிஜ்ஜார் கொலை விவகாரத்தை இந்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் முழு வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்தவும், பொறுப்பை நிலை நிறுத்தவும், நீதியை உறுதி செய்யவும் கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
கனடா பிரதமர் ட்ரூடோ
எனினும் கொலை வழக்கு தொடர்பான ஆதாரங்களை கனடா அரசு ஒருபோதும் வெளியிடாது என திட்டவட்டமாக கூறிய அவர், இந்தியாவும், கனடாவும் சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகள்
எனக் குறிப்பிட்டார்.
கனடா குடிமக்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், மதிப்புகள், சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை நிலைநிறுத்தவும் தேவையான பணிகளை கனடா அரசு தொடர்ந்து செய்யும் எனவும், தற்போது அதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.