உயிரியல் பூங்காவில் இருக்கும் புலிக்கு கொரோனா: அலர்ட் கொடுத்துள்ள அமெரிக்கா!
அமெரிக்காவில் Bronx Zoo-வில் உள்ள புலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவற்றை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் உலுக்கிவருகிறது. ஒட்டுமொத்தமாக உலக நாடுகள் அழுத்தத்தை சந்தித்துக் கொண்டிருப்பதாக சர்வதேச அமைப்புகள் கூறியுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 69ஆயிரத்தை கடந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையோ 12 லட்சத்தை கடந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. வல்லரசு ஏழை நாடுகள் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் கொரோனவை சமாளிக்க முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இந்நிலையில் மனிதர்களிடம் மட்டுமே காணப்பட்ட கொரோனா தாக்குதல் தற்போது விலங்குகளையும் தாக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் Bronx Zoo-வில் உள்ள புலிக்கு கொரனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.முதன்முதலாக ஒரு விலங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும். அந்த உயிரியல் பூங்காவில் உள்ள மேலும் 6 புலிகள் மற்றும் சிங்கங்களுக்கும் கொரோனா அறிகுறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காவில் பணியாற்றிய ஊழியரிடம் இருந்து விலங்குக்கு பரவி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
விலங்குகளை கொரோனா பாதிக்குமா என்ற கேள்விக்கு இதுவரை மருத்துவ ரீதியிலான தெளிவான விளக்கம் ஏதும் கிடைக்காத நிலையில் புலி ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது என வெளியான செய்தி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.