பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு
பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் நாடின் டோரிஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியான பின்பு, 62 வயதான அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையே அண்மையில் அவரை சந்தித்த நபர்களை, பரிசோதிக்க பிரிட்டிஸ் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. கடந்த 8-ஆம் தேதி, பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்க மகளிர் தின நிகழ்ச்சியில் நாடின் டோரிஸ் கலந்து கொண்டார்.
மேலும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்றார். இதனால் அவரை தொடர்பு கொண்ட நபர்கள் அனைவரையம் பரிசோதிப்பதில் பெரும் சிரமம் இருக்குமென அச்சம் எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால், இங்கிலாந்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 382 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அமெரிக்காவில் கொரோனா அச்சத்தால் அதிபர் வேட்பாளர் தேர்தலுக்கான பரப்புரையை பெர்னி சாண்டர்சும் ஜோ பிடனும் ரத்து செய்தனர்.