\
உலகளவில் அதிக மக்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய் - WHO

உலகளவில் அதிக மக்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய் - WHO

உலகளவில் அதிக மக்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய் - WHO
Published on

உலகளவில் அதிக மக்களை பாதிக்கும் புற்றுநோயாக மார்பக புற்றுநோய் உருவெடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச புற்றுநோய் தினம் பிப்ரவரி 4-ம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பேசிய உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஆந்த்ரே இல்பாவி, கடந்த 20 ஆண்டுகளாக மக்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோயாக நுரையீரல் புற்றுநோய் இருந்தது எனக் குறிப்பிட்டார். ஆனால் தற்போது நுரையீரல் புற்றுநோயை விட மார்பக புற்றுநோய்தான் அதிகம் பேரை பாதிப்பதாக அவர் தெரிவித்தார்.

மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோயை தொடர்ந்து மலக்குடல் புற்றுநோயால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆந்த்ரே இல்பாவி கூறினார். பெண்களிடையே உடல் பருமன் பிரச்னை அதிகரிப்பதே மார்பக புற்றுநோய் வேகமாக பரவ காரணம் என்றும் மருத்துவர் இல்பாவி எச்சரித்தார். மேலும் மது அருந்துதல், புகையிலை பயன்பாடு, உடற்பயிற்சி இல்லாமை, காய்கறி, பழங்கள் உண்பதை தவிர்ப்பது போன்ற காரணங்களும் புற்றுநோய்க்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இல்பாவி தெரிவித்தார்.

தற்போது ஆண்டுக்கு ஒரு கோடியே 93 லட்சம் புற்றுநோயாளிகள் உருவாவதாகவும் 2040ஆம் ஆண்டு இது 3 கோடியாக உயரும் என்றும் ஆந்த்ரே இல்பாவி கூறினார். கொரோனா காரணமாக உலகெங்கும் புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆந்த்ரே இல்பாவி குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com