சிரியா | பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பயணத்தின் போது குண்டு வெடிப்பு.. குறிவைத்து தாக்குதலா?
சிரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அந்நாட்டின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில், இன்று சிரிய அதிபர் அஹ்மத் அல்-ஷராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தனது விடுதியில் இருந்து அதிபர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது, மேக்ரான் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குப்பைக் தொட்டி ஒன்றிலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலும் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 4 போலீஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 18 பேர் காயமடைந்துள்ளதாக சிரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன . அதிர்ஷ்ட வசமாக இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம் ஏற்படவில்லை.
அதேபோல, குண்டுவெடிப்புச் சத்தம் அதிபரின் பாதுகாப்பு வாகன அணிவகுப்பிற்கு கேட்கவில்லை என்றும், அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளார் என்றும் பிரான்சின் எலிசி அரண்மனை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மேலும், திட்டமிட்டபடி அதிபரின் இந்த சுற்றுப் பயணம் தொடரும் எனவும் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, சிரிய அதிபருடனான அவரது சந்திப்புகள் தொடர்ந்து நடைபெற்று இருக்கின்றன.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை . சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, சிரிய பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
2024-ஆம் ஆண்டில் சிரியாவின் அதிபராக இருந்த பஷர் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, அந்த நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் முதல் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் மேக்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.

