இந்தோனேஷிய விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!
கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில், லயன் ஏர் என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம்.
வழக்கம் போல கடந்த இரண்டு நாட்களுக்கு முன், காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட லயன் ஏர் விமானம் ஜகர்தாவில் இருந்து புறப்பட்டது. அதில் 8 பணிப்பெண்கள், 2 விமானிகள், 2 குழந்தைகள், ஒரு கைக்குழந்தை உட்பட 189 பேர் இருந்தனர்.
விமானத்தை டெல்லியை சேர்ந்த விமானி பவ்யே சுனேஜா இயக்கினர். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. விமானம் மாயமான தகவல் தெரிய வந்ததும் அதில் பயணித்தவர்களின் உறவினர்கள் விமான நிலையத்தில் கூடினர்.
இந்நிலையில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர். விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதந்தன. அவற்றை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். விமானத்தில் பயணம் செய்தவர்களின் பர்ஸ், புத்தகம், ஹேண்ட்பேக், குழந்தையின் ஷூ, செல்போன் கவர் போன்றவை மீட்கப்பட்டன. உயிரிழந்த பயணிகள் சிலரின் உடல்களும் மீட்கப்பட்டன.
விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. நீரில் மூழ்கி தேடும் வீரர்கள் இந்தப் பணியின் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தேடி வந்த அவர்கள், இன்று அதை கண்டுபிடித்தனர்.
நீர் மூழ்கி வீரர் ஹெண்ட்ரா என்பவர் இதை உறுதிப்படுத்தினார். கடலின் அடியில் உடைந்த விமானத்தின் பாகங்களில் தேடி கருப்புப் பெட்டியை எடுத்தோம்’ என்று அவர் சொன்னார். இந்தோனேஷிய தேடுதல் மாற்றும் மீட்பு குழு செய்தி தொடர்பாளர் யூசுப் லத்தீப்பும் இதை உறுதிப்படுத்தினார்.
இதில் கிடைக்கும் தகவலை வைத்து விமானம் எப்படி, ஏன் விபத்துக்குள்ளானது என்பது தெரிய வரும்.