பின்லேடனின் கடைசி நிமிடம்: மனைவி அமாலின் முதல் பேட்டி!
அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்கள் குறித்த புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வெளியிட்டிருக்கிறது பிரிட்டிஷ் பத்திரிகையான ’தி சண்டே டைம்ஸ்’.
அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி, அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டது உலகம் அறிந்த ஒன்றுதான்.
கேத்தி ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி இணைந்து எழுதிய, "The Exile: The Flight of Osama bin Laden about the last few minutes of the 9/11 mastermind’s life” புத்தகத்திற்காக, பின்லேடனின் நான்காவது மனைவி அமால், அவர்களிடம் பேசியிருக்கிறார்.
’2011, மே மாதம் ஒன்றாம் தேதி, இரவு உணவு முடிந்து, வழக்கமான தொழுகைக்குப் பின் நானும் ஷேக்கும் படுக்கையறைக்குச் சென்றோம். இரவு 11 மணி அளவில் ஒசாமா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். சிறிது நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போட்டாபாதில் இத்தகைய மின்வெட்டு சாதாரணமானதுதான் என்பதால் யாரும் பதட்டமடையவில்லை.
எனது மனதில் காரணமே இல்லாமல் பயம் ஏற்பட்டு தூக்கம் கலைந்தது. ஏதோ சத்தம் கேட்பதாகத் தோன்றினாலும், அது பிரம்மையாக இருக்கும் என்று நினைத்தேன். காரணமற்ற பயம் இல்லை என்பது வெகு விரைவில் உணர்த்தப்பட்டது. சத்தம் அதிகமானதும், ஜன்னல் வழியாகக் காற்று உள்ளே வந்தபோது, நம்மைக் காட்டிக்கொடுத்துவிட்டார்கள், எதிரிகள் நுழைந்துவிட்டார்கள் என்ற என் சந்தேகம் உறுதியானது.
பிறகு குடும்பத்தினர் எல்லோரிடமும் பேசிய ஷேக், 'அவர்கள் கொல்ல விரும்புவது என்னைத்தான். உங்களை அல்ல' என்று சொன்னார். மனைவிகளையும், குழந்தைகளையும் வீட்டின் கீழ்தளத்திற்கு செல்லுமாறு கூறினார். இருந்தபோதிலும், நான் எனது மகன் ஹுசைனுடன் ஒசாமாவின் அருகிலேயே இருக்க முடிவு செய்தேன்”
என்று அமால் தெரிவித்திருக்கிறார்.
2011-இல், பின்லேடனைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ’Operation Neptune Star' நிகழ்வை உடனிருந்து பார்த்த சாட்சியான, அமாலின் தரப்பை “Watching Daddy Die" என்னும் தலைப்பில் தி சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.