ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு.. பரிந்துரை செய்த இஸ்ரேல் பிரதமர்!
உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். ஆனால், இதை இந்தியா மறுத்திருந்தது.
இந்தச் சூழலில், அமெரிக்கா சென்றிருந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் மூனீர், போர் நிறுத்தம் தொடர்பாக அதிபர் ட்ரம்புவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கலாம் என பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலாகின. ஆனால், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த டொனால்டு ட்ரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது என ஆதங்கப்பட்டார். ”நான் அதை நான்கு அல்லது ஐந்து முறை பெற்றிருக்க வேண்டும். அவர்கள் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் அதை தாராளவாதிகளுக்கு மட்டுமே வழங்குகிறார்கள்" என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முறைப்படி பரிந்துரைத்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள நெதன்யாகு அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தபோது நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்தது தொடர்பான கடிதத்தையும் வழங்கினார்.
முன்னதாக, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான பட்டி கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.