மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகம்.. ’பவி’ புயலால் சீனா அச்சம்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை நோக்கி மணிக்கு சுமார் 155 முதல் 200 கிலோமீட்டர் வரையிலான பலத்த காற்றுடன் 'பவி' (Bavi) புயல் தீவிரமாக முன்னேறி வருகிறது. பசிபிக் பெருங்கடலில் உருவான 'பவி' புயல், தொடக்கத்தில் மணிக்கு 200 கி.மீ-க்கும் அதிவேகக் காற்றுடன் 'சூப்பர் டைபூன்' ஆக வலுப்பெற்றிருந்தது. தற்போது அது சற்றே பலவீனமடைந்து மணிக்கு சுமார் 155 - 165 கி.மீ நிலைத்த காற்றுடனும், அதிகபட்சமாக 200 கி.மீ வரையிலான சூறாவளிக் காற்றுடனும் நகர்ந்து வருகிறது. இது, சமீபத்திய ஆண்டுகளில் உருவான மிகப்பெரிய புயல்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
சீனாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஷாங்காய் (Shanghai) நகருக்குத் தெற்கே, புஜியான் (Fujian) மற்றும் ஜெஜியாங் (Zhejiang) மாகாணங்களின் எல்லைப் பகுதியில் இந்த புயல் கரையைக் கடக்கும் என்று சீன தேசிய வானிலை மையம் கணித்துள்ளது. பவி புயல் காரணமாக, சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் இருந்து 17,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், அவசரக் கால மீட்புப் பணிகளுக்காகச் சீன அரசு சுமார் 1,700,000 (1.7 லட்சம்) மீட்புப் பணியாளர்களைத் தயார் நிலையில் வைத்துள்ளது. சீனாவின் தெற்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் 'மேசாக்' (Maysak) புயல் மற்றும் கடுமையான சூறாவளி காரணமாகப் பெருவெள்ளம் ஏற்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

