தொழிலதிபர் மெகுல் சோக்சி பெல்சியத்தில் கைது.. இந்தியாவிற்கு நாடு கடத்தத் தீவிரம்!
இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் மெகுல் சோக்சி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,636 ஆயிரம் கோடி கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல், 2018-ஆம் ஆண்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே கரீபியன் நாடான ஆண்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்சி, 2021ஆம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கடைசியாக மெகுல் சோக்சி தஞ்சம் அடைந்தார். மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் என்பதால் அதன்மூலம் மெகுல் சோக்சியும் பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றார். மெகுல் சோக்சிக்கு எதிராக இரண்டு பிடிவாரண்ட்களை மும்பை நீதிமன்றம் கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்தது. இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து மருத்துவமனைக்கு மெகுல் சோக்சி செல்லத் திட்டமிட்டு இருந்த நிலையில், அவரை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 12ஆம் தேதி கைது செய்யப்பட்ட சோக்சி, பெல்ஜியம் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவக் காரணங்களை மேற்கோள்காட்டி ஜாமீன் பெறுவதற்கான நடவடிக்கைகளை சோக்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான பணியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே, இந்திய நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவும், வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றங்களில் ஆஜராகவும் தயாராக இருப்பதாக தொழிலதிபர் கூறினார். ஆனால் இந்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டது. அதேநேரத்தில், உடல்நலக் காரணங்களுக்காக நிவாரணம் கோரி சோக்சி ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்வார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.