மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை.. 20 ஆண்டுகளில் இல்லாத மின்சார தட்டுப்பாடு.. இருளில் வங்கதேசம்?
வங்கதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மின்சார மற்றும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தலைநகரான டாக்கா (Dhaka) முதல் கிராமப்புறங்கள் வரையில் தினமும் பல மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால், வீடுகள் மட்டுமின்றி மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் முடங்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
நிலைமை எந்த அளவிற்கு மோசமாக உள்ளதென்றால், ’வங்காளத்தின் வெனிஷ்’ என அழைக்கப்படும் பரிஷால் (Barisal) நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், மின்வெட்டு காரணமாக ஜெனரேட்டருக்கான டீசலும் தீர்ந்த நிலையில், செவிலியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செல்போன் டார்ச் மற்றும் மெழுவர்த்தி வெளிச்சத்தை பயன்படுத்தி வருவதாக அந்நாட்டைச் சேர்ந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இதுகுறித்தான, வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
முன்னதாக, வங்கதேசத்தின் மின்சார உற்பத்தி இயற்கை எரிவாயுவை அதிகமாக சார்ந்துள்ளது. 2024-25 நிதியாண்டில் அந்நாட்டின் மின்சாரத்தில் சுமார் 44 சதவீதம் இயற்கை எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், உள்நாட்டு எரிவாயு உற்பத்தி சமீபகாலமாக தொடர்ந்து குறைந்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் எரிவாயுவை வங்கதேசம் அதிகமாக நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த ஜூலை மாதம் வங்கதேசத்தின் மகேஷ்காளியில் உள்ள முக்கிய எல்என்ஜி முனையங்களில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மின் உற்பத்தி குறைந்து, நாடு முழுவதும் 3,000 முதல் 3,500 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பல பகுதிகளில் தினமும் 3 முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த நெருக்கடி வங்கதேசத்தின் முக்கிய ஏற்றுமதித் துறையான ஆடைத் தொழிலையும் கடுமையாக பாதித்துள்ளது. அந்நாட்டின் பொருட்கள் ஏற்றுமதியில் 80 சதவீதத்துக்கும் மேல் ஆடைத் துறை பங்களிக்கும் நிலையில், பல தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்துள்ளது. சில தொழிற்சாலைகள் எரிவாயு மற்றும் மின்சார பற்றாக்குறையால் உற்பத்தியையே நிறுத்தியுள்ளன.
இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து கூடுதல் மின்சாரம் பெறுவது வங்கதேசத்திற்கு ஒரு வாய்ப்பாக இருந்தாலும், உடனடியாக பெரிய அளவில் உதவுவது பெரும் சவாலாக உள்ளது. தற்போது இந்தியாவிடம் இருந்து வங்கதேசம் சுமார் 2,656 மெகாவாட் மின்சாரத்தை இறக்குமதி செய்து வருகிறது. ஆனால் இந்தியாவுக்கும் கூடுதல் மின்சார உற்பத்தித் திறனிலும், எரிவாயு விநியோகத்திலும் கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, உடனடி மின்சார பற்றாக்குறையை சமாளிப்பதுடன், இறக்குமதி எரிபொருளை சார்ந்திருப்பதை குறைத்து, உள்நாட்டு எரிவாயு உற்பத்தி மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களை அதிகரிப்பது வங்கதேசத்திற்கு நீண்டகால சவாலாக மாறியுள்ளது.

