பள்ளி வளாகத்தில் விழுந்த விமானம்.. 19 பேர் உயிரைப் பறித்த சோகம்.. வங்கதேசத்தில் பேரதிர்ச்சி
வங்கதேசம் டாக்காவில் பயிற்சியின்போது விமானப்படையின் போர் விமானம் ஒன்று பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி உட்பட 19 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 100 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டாக்காவின் வடக்குப்பகுதியான உத்தராவில் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் தொடக்கப்பள்ளி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இருக்கும் 2000 மாணவர்கள் பயின்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பள்ளியின் மீதுதான் மதிய வேளையில் மாணவர்கள் வகுப்புகளில் இருந்தபோது வங்கதேச விமானப்படையின் F-7 BGI பயிற்சி விமானம் மோதியிருக்கிறது. இந்த விமானம் சீனத் தயாரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று மதியம் 1.06 மணியளவில் தாக்காவிலுள்ள வங்கதேச விமானப்படைத் தளமான ஏகே கந்தகர் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட நிலையில் சிறிது நேரத்திற்குள்ளாகவே விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதே விபத்திற்குக் காரணமென வங்கதேச ராணுவம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும், விமானப்படையில் இருக்கும் உயர்மட்டக்குழு விபத்து குறித்தான காரணங்களைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்திருக்கின்றனர். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் பள்ளி மாணவர்கள். மேலும், 116 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கின்றனர். காயமடைந்தவர்களில் பெரும்பான்மையானோர் தீக்காயங்களுக்கு உள்ளானவர்கள். காயமடைந்தவர்கள்ஷேக் ஹசீனா தேசிய தீக்காய மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தீயணைப்பு வீரர்கள் விபத்திற்குள்ளான விமானத்தின் மீது தண்ணீரைத் தெளித்து நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக வங்கதேச ரெட் கிரசண்ட் சொசைட்டி நன்கொடை அளிக்க பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. விபத்தில் 19 பேர் உயிரிழந்ததை அடுத்து வங்கதேச அரசு விபத்து நடந்த இந்த நாளை தேசிய துக்க தினமாக அறிவித்திருக்கிறது. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
F-7 விமானம் விமானம் குறைவான மற்றும் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் போர் விமானமாகும். வங்கதேசம் தனது விமானப்படையை நவீனப்படுத்தும் நோக்கத்தில் 2011 ஆம் ஆண்டு 16 F-7 விமானங்களை வாங்குவதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.