ஆஸ்திரேலியாவில் சட்டப்பூர்வமாகிறது ஓரின திருமணம்?
ஆஸ்திரேலியாவில் ஓரினத் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்து 61.6 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர்.
உலகின் பல நாடுகளில் ஓரினத் திருமணம் செய்து கொள்ள சட்டரீதியான அங்கீகாரம் உள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவிலும் ஓரினத் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என ஆயிரக்கணக்கானோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து ஓரினத் திருமணம் தொடர்பாக அங்கு மக்கள் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரசை கட்டுப்படுத்தாத வகையில் கடந்த எட்டு வாரங்களாக நடத்தப்பட்டு வந்த இந்த வாக்கெடுப்பில், மொத்தம் 79.5 சதவிகித வாக்காளர்கள் பங்கேற்றனர்.
இந்த வாக்கெடுப்பின் முடிவில், ஓரினத் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்து 61.6 சதவிகித மக்கள் ஆஸ்திரேலியாவில் வாக்களித்துள்ளனர். இதைதொடர்ந்து, அதனை சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டின் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். அத்துடன் ஓரினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக மாற்றும்படி நாட்டு மக்கள் அரசை பணித்துள்ளனர் என்றும், எனவே கிறிஸ்துமஸ் தினத்துக்குள் அதற்கான சட்டத்தை கொண்டு வர முயற்சி எடுப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் ஓரினத் திருமண ஆதரவாளர்கள் ஆஸ்திரேலியாவின் பொது இடங்களில் ஆடிப் பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.