நிலவின் மறுபக்கத்தை சுற்றிவந்த மனிதர்கள்.. அதிரவைத்த அந்த 40 நிமிடங்கள்!
நாசாவின் ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். இதன் மூலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவைச் சுற்றி வந்த முதல் மனித விண்வெளிப் பயணத்தை அவர்கள் நிறைவு செய்துள்ளனர்.
நாசாவின் ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். இதன் மூலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவைச் சுற்றி வந்த முதல் மனித விண்வெளிப் பயணத்தை அவர்கள் நிறைவு செய்துள்ளனர். 1972-ல் அப்பல்லோ மிஷனுக்குப் பிறகு, நிலவின் சுற்றுப்பாதைக்கு மனிதர்கள் சென்ற முதல் பயணம் இதுவாகும். ஓரியன் விண்கலம், வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5:07 மணிக்கு (00:07 GMT) கலிபோர்னியா கடற்கரைக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் விழுந்தது . நாசா விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர் மற்றும் கிறிஸ்டினா கோச் ஆகியோருடன், கனடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சனும் அதில் பயணம் செய்தனர். பூமிக்குத் திரும்புவதற்கு முன், அவர்கள் சந்திரனின் மறுபக்கத்தைச் சுற்றிப் பயணம் செய்தனர்.
ஏப்ரல் 2-ஆம் தேதி, SLS ராக்கெட் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் 'ஓரியன்' விண்கலம் விண்ணில் பாய்ந்தது. நிலவின் மறுபக்கம் குறித்தான தரவுகளை சேகரித்தனர். அதுகுறித்தன ஆச்சரியமளிக்கும் பல புகைப்படங்களையும் நாசா பகிர்ந்து இருந்தது. அதே நேரத்தில் ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தது. நிலவைச் சுற்றி பயணம் மேற்கொண்ட ஆர்டெமிஸ் II விண்கலம், நிலவின் மறுபக்கத்திற்கு சென்றபோது, சுமார் 40 நிமிடங்கள் பூமியுடனான தொடர்பை இழந்தது. இது முன்னரே கணிக்கப்பட்ட ஒன்று என்றாலும் அந்த நேரத்தில் என்ன நடக்கும், பாதுகாப்பாக இருக்கிறார்களா போன்ற பரபரப்பும் ஏற்பட்டது. பின் மீண்டும் தகவல் தொடர்பு கிடைத்த பின்பு நாசா குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அதுமட்டும் இல்லாமல் இந்த பயணத்தில் சென்ற வீரர்கள் பூமியில் இருந்து சுமார் 4,06,778 கி.மீ தொலைவை எட்டி, மனித வரலாற்றிலேயே பூமியை விட்டு அதிக தூரம் பயணித்தவர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். ஆர்டெமிஸ் II , எதிர்கால நிலவுப் பயணங்களுக்கு, குறிப்பாக அப்பல்லோ காலத்திற்குப் பிறகு முதன்முறையாக நிலவின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்களைத் தரையிறக்குவதை நோக்கமாகக் கொண்ட ஆர்டெமிஸ் IV-க்கு, ஒரு முக்கியமான சோதனைப் பயணமாக கருதப்படுகிறது.

