இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால தெருவோர உணவுக் கடை!
கி.பி 79 இல் எரிமலை வெடித்த காரணத்தினால் மண்ணுக்குள் புதைந்து போன இத்தாலி நாட்டின் பொம்பெயி நகரத்தில் தெருவோர உணவகம் செயல்பட்டத்தை ஆய்வின் மூலம் அடையாளம் கண்டுள்ளனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். ரோமாபுரி கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வழிப்போக்கர்களுக்காக இந்த உணவகம் இயங்கி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
சூடான உணவு பொருட்களை விற்பனை செய்யும் உணவகமாக இது இருந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இந்த கடையை அங்குள்ள REGIO ஐந்தாம் தளத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான சுடுமண் கூஜாவில் கடையின் உரிமையாளர் உணவை வைத்துள்ளதையும் இந்த ஆராய்ச்சியில் கணடறியப்பட்டுள்ளது.
உணவகத்தின் முகப்பில் வண்ண நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோழி மற்றும் வாத்தின் படங்களும் வரையப்பட்டுள்ளன. இங்கு கண்டெடுக்கப்பட்ட உணவுகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறைச்சியை கொண்டு உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் முதன்முறையாக முழுமையான ஒரு உணவகத்தை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் ஆய்வு குழுவினர்.
இத்தாலியின் நாபொலி நகரில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பொம்பெயி பகுதி எரிமலை வெடித்து சிதறிய சாம்பலினால் மண்ணுக்குள் புதைந்த போது சுமார் 13000 பேருக்கு வசிப்பிடமாக இருந்துள்ளது.