கால்நடைகள் இனப்பெருக்கத்துக்காக ஒரு புதிய செயலி !
மாடுகளின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற காளைகளை தேர்ந்தெடுக்க புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் உலகில் எத்தனையோ ஆப்கள் வந்துவிட்டன. தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு ஆப், டேட் செய்ய ஆப், பணப் பரிமாற்ற ஆப் என ஏகப்பட்ட ஆப்கள் வந்துவிட்டன. இது எல்லாம் மனிதர்களுக்கானது. ஆனால் தற்போது முதல்முறையாக கால்நடைகளுக்காக அதுவும் மாடுகளுக்காக புதிய ஆப் தொடங்கப்பட்டுள்ளது.
லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்றுதான் இந்த ஆப்பை உருவாக்கியுள்ளது. டுட்டர் (Tudder) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப்பில் மாடுகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது மாடுகளின் உயரம், எடை, வயது உள்ளிட்ட விவரங்களோடு மாடுகளின் உரிமையாளர் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் தங்களின் மாடுகளுக்கு, இனப்பெருக்கத்திற்கு ஏற்ற தகுந்த காளைகளை இந்த ஆப் மூலம் உரிமையாளர்கள் பெற முடியும். அதுமட்டுமின்றி புதிய மாடுகளை வாங்க விரும்புவோர்களுக்கும் இந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. கால்நடைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆப், விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

