தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதியை தடுக்கவில்லை: தடுப்புபட்டியலில் பாகிஸ்தான் !
நிதி நடவடிக்கை அதிரடி குழு (FATF) அமைப்பின் ஆசியா-பசிபிக் குழு பாகிஸ்தானை தடுப்பு பட்டியலில் வைத்துள்ளது.
நிதி நடவடிக்கை அதிரடி குழு (FATF) அமைப்பின் ஆசியா-பசிபிக் பிரிவு நிதி மோசடி, பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதி போன்றவற்றை கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பின் கூட்டம் இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானை தடுப்புப் பட்டியலில் வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் நிதி மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதியை தடுப்பது தொடர்பான 40 காரணிகளில் 32ல் பாகிஸ்தான் சிறப்பாக செயல்படவில்லை. அத்துடன் பயங்கரவாத செயல்களுக்கு செல்லும் நிதியை கட்டுபடுத்தவதும் பாகிஸ்தான் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை. இதனையடுத்து இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானை தடுப்புப் பட்டியலில் வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நிதி நடவடிக்கை அதிரடி குழு (FATF) கிரே பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத செயல்களுக்கு செல்லும் நிதியை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே வரும் அக்டோபர் மாதம் வரை இந்த நடவடிக்கை எடுக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மேலும் அக்டோபர் மாதம் வரை பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த அமைப்பின் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது ஆசியா-பசிபிக் குழுவின் தடுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.