'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு !

'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு !

'இனி அமைதிக்கான அடையாளம் நீங்களல்ல' ஆங் சான் சூச்சியிடம் இருந்து விருது பறிப்பு !
Published on

ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி இன்டர்நேஷனல் எனும் பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது

உலக மக்களால் ஜனநாயகப் போராளியாக அறியப்படுபவர் மியான்மரின் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சி. 1990-களில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் அமைதியின் அடையாளமாகவே கருதப்படுகிறார். அதற்காகவே அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அவர் ஆட்சிக்கு வந்தால், மியான்மரின் அனைத்து அடக்குமுறைகளும் முடிவுக்கு வரும் என்று அனைத்துத் தரப்பினரும் நம்பினார்கள். ஆனால், ரோஹிங்யா எனப்படும் இஸ்லாமிய சமூகத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை அவர் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றம்சாட்டப்பட்டது. ஊடகங்களையும் அவர் புறக்கணிப்பதாகக் கூறப்பட்டது.

சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, உயிரைப் பணயம் வைத்து அவரைப் பல செய்தியாளர்கள் சந்தித்துப் பேட்டி கண்டனர். ஆனால், அதிகாரம் கைக்குவந்த பிறகு, உள்நாட்டு ஊடகங்கள் எதற்கும் அவர் பேட்டியளிக்கவில்லை. செய்தியாளர் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யவில்லை. தேவைப்பட்டால் சில சர்வதேச ஊடகங்களுக்கு மட்டும் பேட்டி தருகிறார் என உள்நாட்டுச் செய்தியாளர்கள் கவலை தெரிவித்தனர். இவையெல்லாம் ராணுவத்தின் அடக்குமுறை ஆட்சியை நினைவூட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை திரும்ப பெறுவதாக அம்னிஸ்டி இன்டர்நேஷனல் எனும் பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு ஆங் சான் சூச்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 

அதில் 9 வருடங்களுக்கு முன்னர் அம்னிஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் உயரிய விருதான 'நம்பிக்கைக்கான அடையாளம்' என்ற விருதினை உங்களுக்கு வழங்கியது. உங்களின் அடையாளமாக கருதப்பட்ட அமைதியும், சேவை மனப்பான்மையும் தொடரும் என்று நம்பினோம். ஆனால் சமீக காலங்களில் உங்களின் செயல்பாடுகளில் எங்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. மியான்மரின் அடக்குமுறைகளையும், ரோஹிங்யா எனப்படும் இஸ்லாமிய சமூகத்தினர் மீது விடுக்கப்பட்ட வன்முறைகளையும் நீங்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் உங்களுக்கு வழங்கப்பட்ட விருதினை திரும்பப்பெறுவதாக அறிவிக்கிறோம். மியான்மர் மக்களுக்கு சமத்துவத்தையும் உரிமையையும் பெற்றுத்தருவதே எங்கள் குறிக்கோள் என்பதை நாங்கள் மீண்டும் நினைவுகூர்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆங் சான் சூச்சிக்கு தாங்கள் வழங்கிய  எல்லி வெய்ஸல் (Elie Wiesel) என்ற விருதினை அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் மெம்மோரியல் அருங்காட்சியகம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com