அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி
கலிபோர்னியாவின் பள்ளி அருகே அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தின் கார்னிங் என்ற நகரின் அருகே ஒரு வீட்டின் மீது திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனால் அங்கு இருந்தவர்கள் சிலர் பதறி ஓடியுள்ளனர்.
இதையடுத்து அந்த நபர் அருகில் இருந்த பள்ளிக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஒரு சில மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்ட போதிலும், மாணவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. காயமடைந்த மாணவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்பிறகு அந்த நபர் சாலை அருகே நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த நபரை சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து அங்கு நிலவிய பதற்றம் தணிந்தது.