“என்னோட கணக்க ஏன் முடக்குனீங்க”-ஃபேஸ்புக்கை கோர்ட்டுக்கு இழுத்து $50,000 இழப்பீடு பெற்ற அமெரிக்கர்!

தன்னுடைய முகநூல் பக்கம் முடக்கப்பட்டதை எதிர்த்து பயனாளர் ஒருவர், அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் மூலம் இழப்பீடு பெற்றுள்ளார்.
Jason Crawford
Jason Crawfordtwitter

மனித மனங்களை ஆக்கிரமிப்பதில் சமூக வலைதளங்களுக்கு என்றுமே முதலிடம் உண்டு. அதில், முகநூலும் (Facebook) ஒன்றாக விளங்குகிறது. இதன்மூலம் பல்வேறு பதிவுகள், வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. ஒவ்வொரு வரும் தனித்தனியாக இதில் அக்கவுண்ட் வைத்து தங்களுடைய பதிவுகளை வெளியிட்டு வருவதுடன், மற்றவரின் பதிவுகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். இது, இணையவாசிகளின் நட்புப் பாலமாக இருக்கிறது என்றுகூறச் சொல்லலாம். இதில் பல கோடி பயனர்கள் கணக்கு வைத்துள்ளனர்.

இந்த நிலையில், தன்னுடைய முகநூல் பக்கம் முடக்கப்பட்டதை எதிர்த்து பயனாளர் ஒருவர், அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற்றிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கொலம்பஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெசன் கிரவ்பொர்ட் (Jason Crawford). வழக்கறிஞரான இவர், முகநூலில் கணக்கு ஓபன் அதன் பயனராக இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டு, அவருடைய முகநூல் பக்கம் திடீரென முடக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து முகநூல் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த நிறுவனம் ஒரு நீளமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.

அதில், ”தாங்கள் குழந்தைகள் தொடர்பான ஆபாச பதிவுகளைப் பார்த்துள்ளீர்கள். அது, முகநூல் விதிகளை மீறும் செயல் என்பதால் தங்களுடைய கணக்கு முடக்கப்பட்டு உள்ளது” எனக் கூறப்பட்டிருந்தது. இதற்கு அவர், “தான் முகநூல் விதிகளை மீறும் வகையில் அதுபோன்ற எந்தப் பதிவுகளையும் பார்க்கவில்லை” எனத் தெரிவித்ததுடன், முடக்கப்பட்ட தனது முகநூல் கணக்கையும் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர நிறுவனத்திடம் உதவி கேட்டுள்ளார். ஆனால், அவரது முயற்சிக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெசன், எந்தவித காரணமும் இன்றி தனது கணக்கை முடக்கிய முகநூல் நிறுவனமான மெட்டா மீது ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், ஜெசனின் கணக்கை முடக்கியதற்கான காரணத்தை முகநூல் நிறுவனத்தால் தெரிவிக்க முடியவில்லை. இதையடுத்து அவருடைய முகநூல் கணக்கை முடக்கியதற்காக 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் 41 லட்சத்து 11 ஆயிரத்து 250 ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து முடக்கப்பட்ட அவரது முகநூல் கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதேவேளை, ஜெசனுக்கு 50 ஆயிரம் டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த தொகையை மெட்டா நிறுவனம் இதுவரை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com