பின்லேடன் மகன் ஹம்சா கொலை.? அல்கொய்தா வெளியிட்ட வீடியோ.. உயிருடன் இருக்கிறாரா?
செப்டர்பர் 11-ம் 2001 அமெரிக்காவில் நடைபெற்ற நைன் லெவன் (9/11) தாக்குதலின் 25-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட பின்லேடனின் மகன் ஹம்சா பற்றிய வீடியோ ஒன்றை 7 ஆண்டுகளுக்குப் பிறகு, 9/11 தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா அமைப்பு வெளியிட்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
இரட்டைக் கோபுர தாக்குதல் உள்ளிட்ட 9/11 தாக்குதலால் ஏற்பட்ட சுமார், 3,000 பேர் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்த அல்-கொய்தா அமைப்பின் அப்போதைய தலைவராக இருந்தவர் ஒசாமா பின்லேடன். இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அல் கொய்தா அமைப்பின் அடுத்த தலைமுறை முகங்களுள் ஒருவராக கருதப்பட்டவர் தான், பின் லேடனின் மகன் ஹம்சா பின்லேடன்.
தொடர்ந்து, தந்தையின் மரணத்திற்கு பழி வாங்கும் நோக்கில் அமெரிக்காவின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்த ஹம்சா திட்டமிட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. இந்தச்சூழலில் தான், 2019-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த, அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின. பின்னர், 2019 செப்டம்பரில் அவரது மரணம் குறித்து அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், அல் கொய்தா அவரது கொலை குறித்து இன்னும் உறுதிப்படுத்தாமல் இருந்து வருகிறது.
இந்தச்சூழலில் தான், நேற்றைய தினம் தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அல்-கொய்தா அமைப்பின் ஊடகப் பிரிவான அஸ்-சஹாப் (As-Sahab Media Foundation), ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் இடம்பெறும் சுமார் 50 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளது. இதற்கு, ’செப்டம்பர் 11 தாக்குதல்களில் கால் நூற்றாண்டு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், ”ஹம்சா விரிசல்கள் நிறைந்த ஒரு சுவரின் முன் அமர்ந்து பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரியின் இதுவரை காணப்படாத படங்களும் இடம்பெற்றுள்ளன. எனினும், அவர் இருந்தது இப்போது எடுக்கப்பட்ட வீடியோவா? அல்லது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோவா? என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
இந்தச்சூழலில் தான், தற்போது அல்-கொய்தா வெளியிட்டிருக்கும் வீடியோ சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாக, அவரது பேச்சுகள் மற்றும் வீடியோக்கள் மூலம் அல்-கொய்தாவின் கொள்கைகளைப் பரப்பவும், தனது பிரச்சாரத்தை மீண்டும் கவனத்திற்கு கொண்டுவருவதற்கான அந்த அமைப்பின் முயற்சியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதேசமயம், கடந்த 2025-ல் வெளியான சில அறிக்கைகள், ஹம்சா உயிருடன் இருப்பதாகக் கூறியிருந்தன. இந்தச்சூழலில் தான், ஹம்சா பின்லேடன் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

