’மர்மமான ஊசி’ - கவிஞர் பாப்லோ நெருடா மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த சிலி நீதிமன்றம் உத்தரவு!

1973இல் ராணுவ சர்வாதிகாரி அகஸ்டோ பினோசே ஆட்சிக்கு வந்தபோது சிலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்த கவிஞர் பாப்லோ நெருடாவின் மரணம் தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாப்லோ நெருடா
பாப்லோ நெருடாட்விட்டர்

சிலி நாட்டின் பிரபலமான கவிஞர் நெருடா

இருபதாம் நுற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவர், பாப்லோ நெருடா. சிலி நாட்டைச் சேர்ந்தவரான இவரது இயற்பெயர், ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ. கம்யூனிச, மார்க்சிய தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட இவர், சிலி நாட்டின் பிரதமராக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சல்வடார் அலண்டேவுக்கு மிகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.

ஒரு செடி மலர்ந்திடாது ஆனால் மறைவாக, தனக்குள் மட்டும், பூக்களின் ஒளியைக் ஏந்திக் கொண்டிருப்பதைப் போல நான் உன்னை நேசிக்கிறேன் பூமிக்குள் இருந்து கிளம்பும் அந்த இறுக்கமான நறுமணமாக என் உடலுக்குள் மங்கலாக வசிக்கும், உன் அன்புக்கு நன்றி. “One Hundred Love Sonnets” By Pablo Neruda

1973ஆம் ஆண்டு சிலியை, அமெரிக்க ராணுவ உதவியுடன் சர்வாதிகாரி அகஸ்டோ பினோசெட் தலைமையிலான படையினர் கைப்பற்றினர். அவரது மாளிகையையும் சுற்றிவளைத்தனர். இதில் அலண்டே தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்குப் பிறகு, அவரது ஆதரவாளர்கள் பலரும் படுகொலை செய்யப்பட்டு வந்தனர்.

நான் உன்னை நேசிக்கிறேன், எப்படி, அல்லது எப்போது, அல்லது எங்கிருந்து என்பதை அறியாமல். நான் நேரடியாக உன்னை நேசிக்கிறேன் சிக்கல்களோ செருக்கோ இன்றி: நான் இவ்வாறாக உன்னை நேசிக்கிறேன் ஏனெனில் வேறெவ்வாறாகவும் எனக்கு நேசிக்கத் தெரியவில்லை, இந்த வகையைத் தவிர்த்து வேறெப்படியுமின்றி, வெகு நெருக்கத்தில் எனது மார்பின் மேலுள்ள உனது கரம் என்னுடையதாக, வெகு நெருக்கத்தில் உன் கண்கள் எனது கனவுகளுடன் மூடிக் கொள்! “One Hundred Love Sonnets” By Pablo Neruda

நெருடா புற்றுநோயால் மரணமடைந்ததாக அறிவிப்பு

இந்த நிலையில் நண்பர்கள் உதவியுடன் சில காலம் தலைமறைவாக இருந்தார், நெருடா. அப்போது, சிலியில் இருந்து வெளியேறி மெக்ஸிகோவுக்குத் தப்பிச் செல்லலாம் என நினைத்த அவர், ஒருநாளுக்கு முன்பாக, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அந்தச் சமயத்தில், அவர் புற்றுநோயால் இறந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. 69 வயதான அவர், புரோஸ்டேட் புற்றுநோயால் இறந்ததாக அரசாங்கம் கூறியது. ஆனால், இந்த மரணத்தை அவருடைய குடும்பத்தினர், ஓட்டுநர் மற்றும் தனிப் பாதுகாவலர் ஆகியோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

நூலே!என்னைப் போகவிடுநான்உறை போட்டபெரிய தொகுதிகளைஎழுதமாட்டேன்நான்பிற தொகுதிகளிலிருந்துஉருவாவதில்லைஎன் கவிதைகளுமபிறகவிதைகளைத்தின்று வளர்வதில்லைஅவைஉணர்ச்சியூட்டும்நிகழ்ச்சிகளையேவிழுங்குகின்றன - நெருடா

2011இல் தொடங்கிய நெருடாவின் மரணம் பற்றிய விசாரணை

இதையடுத்து, அவருடைய மரணத்திற்கான காரணம் குறித்த விசாரணை 2011இல் தொடங்கியது. இதையடுத்து, அவர் மரணம் பற்றிய விசாரணைகள் வேகம் பிடித்தன. அவருடைய தனிப் பாதுகாவலரான மானுவல் ஆராயா, ’நெருடா இறப்பதற்கு சற்று முன்பு அவரது மார்பில் மர்மமான ஊசி போடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தது மேலும் சந்தேகத்தை எழுப்பியது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தன்னுடைய 77 வயதில் இறந்துபோனார் என்பது குறிப்பிடத்தக்கது.

2013இல் தோண்டி எடுக்கப்பட்ட நெருடாவின் உடல்

இதையடுத்து, கடந்த 2013ஆம் ஆண்டு நெருடாவின் உடல் பாகங்கள் தோண்டியெடுக்கப்பட்டு பல்வேறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. முதல்கட்ட ஆய்வில் எந்த விஷத்தன்மை கொண்ட பொருளும் அவரது உடல் பாகங்களில் காணப்படவில்லை என்று ஆய்வறிக்கை சொன்னது. இந்த ஆய்வின் முடிவுகள்மீது மீண்டும் சந்தேகம் எழுப்பப்பட்டதால் நெருடாவின் உடற்பாகங்கள் மீண்டும் பிற நாடுகளில் உள்ள தடயவியல் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது. பின்னர், 2015இல் சிலி அரசாங்கம், நெருடாவின் மரணத்திற்கு மூன்றாம் தரப்பினர் காரணமாக இருக்கலாம் என்று கூறியது.

என்னை நேசிப்பதை கொஞ்சம் கொஞ்சமாய் நீ கைவிடும்போது, உன் மேலான என் காதலும் போய்விடும் கொஞ்சம் கொஞ்சமாய்! எளிதில் என்னை நீ மறப்பாய் எனில் என்னைத் தேட வேண்டாம், ஏனென்றால் நான் உன்னை ஏற்கனேவே மறந்திருப்பேன்! - நெருடா

’புற்றுநோயால் இறக்கவில்லை’-வல்லுநர்கள் குழு அறிவிப்பு

பிறகு 2017இல், சிலி மற்றும் சர்வதேச வல்லுநர்கள் குழு ’நெருடா புற்றுநோயால் இறக்கவில்லை. ஆனால், அவரைக் கொன்றது எது என்பதைத் தங்களால் தீர்மானிக்க முடியவில்லை’ என்று உறுதியாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில், நெருடாவின் மரணத்தை விசாரிக்கும் விஞ்ஞானக் குழு ஒன்று, ’நெருடாவின் உடல் பாகங்களில் ஆபத்தான போட்யூலிசத்தை உண்டாக்கும் பாக்டீரியாவைக் கண்டறிந்ததாகத் தெரிவித்தது. ஆயினும், அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை’ எனத் தெரிவித்தது. இதையடுத்து, அந்த விசாரணையை நீதிபதி பாவ்லா பிளாசா டிசம்பர் 2023இல் முடித்து உத்தரவிட்டார். ஆனால் நெருடாவின் குடும்பத்தினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் அந்த முடிவை எதிர்த்து உடனே மேல்முறையீடு செய்தனர்.

மரணம் பற்றிய விசாரணை: மீண்டும் தொடங்க உத்தரவு

இதையடுத்து தற்போது, இது தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து நீதிமன்றம், ‘உண்மைகளை தெளிவுபடுத்துவதற்கு துல்லியமான நடைமுறைகள் இருப்பதால், விசாரணை இன்னும் தீர்ந்துவிடவில்லை. அகஸ்டோ பினோசேயின் சர்வாதிகாரத்தால் நெருடாவும் விஷம் குடித்ததாக பலர் நம்புகிறார்கள். ஆனால், உண்மையில் நெருடா மரணமடைந்தது எப்படி என்பது குறித்தும், அதில் இருக்கும் மர்மம் குறித்தும் சிலி மீண்டும் விசாரிக்கும்’ என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com