காபூல் திருமண மண்டபத்தில் தற்கொலைத் தாக்குதல்: 40 பேர் உயிரிழப்பு!
காபூலில் திருமண மண்டபத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஹ்ர்-இ- துபாய் என்ற திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்து கொண்டிருந்தது. இதற்காக ஏராளமான விருந்தினர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது உடலில் குண்டுகளை அணிந்திருந்த ஒருவர் திடீரென அதை வெடிக்கச் செய்தார். இதில் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். இதையடுத்து அங்கு வந்த பாதுகாப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை தாக்குதலில் சுமார் 40 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருப்ப தாகவும் கூறப்படுகிறது. இந்த தற்கொலை தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.