ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டுக்கு இடையே நிலவி வரும் பதட்டமான சூழலை உலக மக்களுக்கு செய்தியாக சொல்ல உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் முகாமிட்டுள்ளார் பிலிப் க்ரோதர் (Philip Crowther) என்ற செய்தியாளர். இவரை அடுத்த ஜேம்ஸ் பாண்ட் என சொல்லி வருகின்றனர் நெட்டிசன்கள். இவர் அப்படி என்ன செய்தார்?
பொதுவாகவே செய்தி சேகரிக்கும் களப்பணியில் ஈடுபட்டு வரும் செய்தியாளர்களின் வாழ்க்கையில் பலவிதமான த்ரில்லான அனுபவம் இருக்கும். அதுவும் க்ரைம் நியூஸ் கவரேஜ் என்றால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் போர் மூளும் சூழல் உருவாகியுள்ள உக்ரைனில் இருந்து ஆங்கிலம், லக்சம்பர்கிஷ், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், பிரஞ்சு மற்றும் ஜெர்மன் என ஆறு மொழிகளில் அங்கு நிலவும் சூழலை செய்தியாக எடுத்து சொல்லியுள்ளார் பிலிப். அந்த வீடியோவை அவரே ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் 6.8 மில்லியன் வியூஸ்களை கடந்திருந்தது அந்த வீடியோ. அந்த செய்தியில் கீவ் நகரம் மற்றும் நகரத்தில் வசிக்கும் மக்கள் வழக்கம் போல அமைதியாக இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார் அவர்.
அதை கவனித்த நெட்டிசன்கள் அவரை அடுத்த ஜேம்ஸ் பாண்ட் என சொல்லியுள்ளனர். இப்படியாக அவரது வீடியோவுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. தற்போது அசோஸியேட்டட் பிரஸ் நிறுவனத்திற்காக பணியாற்றி வருகிறார் பிலிப். முன்னதாக பிரான்ஸ் 24 உட்பட சில பத்திரிகைகளில் அவர் பணியாற்றியுள்ளார் என தெரிகிறது.