\
85 உயிர்களை பலி வாங்கிய மெக்சிகோ துயரச் சம்பவம்

85 உயிர்களை பலி வாங்கிய மெக்சிகோ துயரச் சம்பவம்

85 உயிர்களை பலி வாங்கிய மெக்சிகோ துயரச் சம்பவம்
Published on

மெக்சிகோவின் ஹிடால்கோ மாகாணத்தில் எரிவாயு குழாய் உடைந்ததில் அதில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்து ஆறாக ஓடியது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்த பாத்திரங்கள், பக்கெட்டுகளை கொண்டு, கச்சா எண்ணெய்யை பிடிக்க அங்கு முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வு மற்றும் வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அதில் 85 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

எரிவாயு குழாய் வெடித்தபோது அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ரிகார்டோ ‌பிளாசியோஸ் என்பவர் காயங்களுடன் உயிர் தப்பினார். இவர், இந்நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். எரிவாயு குழாய் வெடித்ததும், அங்கிருந்தவர்களில் பலர் அலறியடித்தபடி உயிர் தப்பிக்க ஓடியது நெஞ்சை பதற வைப்பதாக இருந்தது என்றும் ரிகார்டோ மிரட்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட சடலங்கள், மருத்துவமனைக்கு அருகில் உள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. 

தீ விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வருவதால், உடல்களை கேட்டு, உறவினர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் ‌பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வெடி விபத்து நிகழ்ந்த பகுதியும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

எரிவாயுவை திருடும் நோக்கில், குழாயை சிலர் உடைத்ததால் தான் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிபர் லோபஸ் ஓப்ரேடாரும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து எரிவாயு திருட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com