
நேபாளத்தின் ஜாஜர்கோட் மாவட்டம் லாமிடாண்டா பகுதியை மையமாகக் கொண்டு இரவு 11.32 மணிக்கு பதிவான நிலநடுக்கம், 15 வினாடிகளுக்கு மேல் நீடித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவான இந்த நிலநடுக்கம், தலைநகர் காத்மாண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உணரப்பட்டது. வீட்டில் உள்ள பொருட்கள் குலுங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வீடுகளில் இருந்து அலறியடித்தபடி ஓடிவந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இதனால் பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. ஜாஜர்கோட், ரக்கூம் ஆகிய மாவட்டங்களில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 128 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால், பல இடங்களில் தொலைத் தொடர்பு சேவைகள் முடங்கியுள்ளன. இதற்கிடையே, இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு அச்சத்துடன் வெளியே வந்தனர். இந்தியாவில் யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.