நேபாளத்துக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து குலுங்கிய நிலம்.. மீண்டும் உலுக்கிய இயற்கை!
செய்தியாளர் - கார்த்திகேயன்
இமயமலையில் உள்ள பனிப்பாறை உருகியதால், கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று நேபாளத்தின் கோஷி ஆற்றிலும், திரிசூலி ஆற்றிலும் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவு கொன்ட பனிப்பாறை உருகி, 300 கி.மீ வேகத்தில் மினி சுனாமி போல் வந்த இந்த வெள்ளத்தில் சிக்கி, 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியிலும், இந்தியாவிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் பீகார், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும், நேபாள வெள்ளத்தின் தாக்கம் எதிரொலித்திருந்தது. இப்படி மாபெரும் அழிவை ஏற்படுத்தியுள்ள இந்த பேரிடர் நடந்து 14 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், மாயமானவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஏற்கெனவே இயற்கையின் கோரத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில், மீண்டும் மற்றோர் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டுள்ளது. அதாவது, நேபாளத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள முஸ்தாங் மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி அளவில், 5.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், அன்டை மாவட்டங்கள் சிலவற்றிலும் உணரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவல்களின்படி, காத்மாண்டில் இருந்து வடமேற்கே 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தின் லோமந்தாங் பகுதியே இதன் மையமாகும்.
இந்த நிலநடுக்கத்தால், உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. எனினும், மனாங், டோல்பா மற்றும் மியாக்டி (Myagdi) ஆகிய மாவட்டங்களிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்கங்கள், தீவிர வானிலை நிகழ்வுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடான நேபாளத்தில், இந்தச் சமீபத்திய நிலநடுக்கம் மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதிகாரிக நிலைமையை மதிப்பிட்டு வருகின்றனர்.

