அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் படுகாயமடைந்தனர்.
மேற்கு டெக்சாஸில் உள்ள மிட்லேண்ட் பகுதியில் தனது வாகனத்தில் இருந்த ஒருவர் அங்கு சென்றுகொண்டிருந்த மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் படுகாயமடைந்தனர். பின்னர், அவர் தபால் கொண்டு செல்லும் லாரியை கடத்தினார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், லாரியை மடக்கினர். அதில் இருந்தவர், போலீசாரை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் ஒரு அதிகாரி படுகாயமடைந்தார். பின்னர் போலீசார் குவிக்கப்பட்டு அவரை பிடிக்க முயன்றனர். அவர்களின் தாக்குதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கொல்லப்பட்டார். அவருக்கு 30 வயது இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், சினெர்ஜி என்ற சினிமா தியேட்டரின் பார்க்கிங் பகுதி பரபரப்பானது. சினிமாவில் நடப்பது போல இருந்தது என்று தெரிவித்திருக்கிறார் நேரில் பார்த்த ஒருவர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.