2024-ல் வழக்கத்தைவிட கூடுதலாக 41 நாட்கள் வெப்பம்.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை!
காலநிலை மாற்றத்தின் தாக்கமாக 2024ஆம் ஆண்டில் வழக்கத்தை விட கூடுதலாக 41 நாட்கள் மோசமான வெப்பநிலை நிலவியதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
World Weather Attribution மற்றும் Climate Central அமைப்பு இணைந்து நடப்பு ஆண்டில் நிகழ்ந்த காலநிலை மாற்றப் பாதிப்புகள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் இவ்வாண்டு 219 மோசமான பருவநிலை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் 26 நிகழ்வுகளில் 3,700 பேர் உயிரிழந்ததோடு லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.
இதுவரையில் இல்லாத அளவில் 2024 ஆம் ஆண்டில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வழக்கத்தை விட கூடுதலாக 41 நாட்கள் மோசமான வெப்பநிலை நிலவியுள்ளது.
தற்போது நிகழும் அதீத வெப்பம், பஞ்சம், புயல்கள், கனமழை ஆகியவற்றுக்கு காலநிலை மாற்றம் முதன்மைக் காரணமாக இருப்பதாகவும் இதனால், உயிரிழப்பும் வாழ்வாதார இழப்பும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ள காலநிலை ஆராய்ச்சியாளர்கள் புதைபடிவ எரிபொருள் பயன்பாடு தொடரும்பட்சத்தில், இந்த நிலைமை இன்னும் மோசமடையும் என்று எச்சரித்துள்ளனர்.