“40 மில்லியன் சிறுவர்கள் புகையிலை பயன்படுத்துகிறார்கள்” - உலக சுகாதார நிறுவனம்
13-15 வயதிற்குட்பட்ட 40 மில்லியன் சிறுவர்கள் புகையிலை பயன்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐநா சார்பில் ‘புகையிலை இல்லாத தினம்’ இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் சிறுவர்களிடையே புகையிலை பயன்பாட்டின் விபரீதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக 13 வயதிலிருந்து 17 வயது வரை உள்ள சிறுவர்களிடம் புகையிலை பயன்பாடு குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விழிப்புணர்வுடன் பல்வேறு தகவல்களையும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகில் 13-15 வயதிற்குட்பட்ட 40 மில்லியன் சிறுவர்கள் புகையிலை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் புகையிலை பழக்கத்தைத் தொடங்கும் சிறுவர்களே பின்னாளில் அவற்றிற்கு பெரும் அடிமையாவதாகும் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று புகை பிடிக்கும் பழக்கத்தைத் தொடங்கும் 10-ல் ஒன்பது நபர்கள் 18 வயதில் அப்பழக்கத்தைத் தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் புகையிலையின் ஆபத்து குறித்துப் புரிய வைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் புகையிலை நிறுவனங்கள் விளம்பரத்திற்காக 9 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிடுவதாகவும், இதன்மூலம் அவர்கள் சிறுவர்களைப் புகையிலை பழக்கத்திற்குள் ஈர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

