காதலியுடன் தகராறு: சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு, 4 பேர் உயிரிழப்பு!
சிகாகோ நகரின் மருத்துவமனை ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மருத்துவர், போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் உள்ளது மெர்சி மருத்துவமனை. இங்கு உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 3 மணிக்கு வாலிபர் ஒருவர் வந்தார். கார் பார்க்கிங் பகுதியில் வந்த அவர், அங்கு வந்த பெண் மருத்துவர் தமாரா ஓ நீல் என்பவரிடம் பேசிக்கொண்டிருந்தார். தமரா, அந்த வாலிபரின் முன்னாள் காதலி என்று கூறப்படுகிறது. இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.
(தமாரா)
இந்நிலையில் இருவருக்கும் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. தமாரா கோபமாக அந்த வாலிபரை நோக்கி கத்திக் கொண்டிருந்தார். அப்போது மருத்துவரின் தோழி வெளியே வந்தார். இவர்கள் சண்டையை அறிந்து அவர் சமாதனம் செய்ய முயன்றார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மிரட்டினார். இதனால் அதிர்ச்சியான தோழி உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று மருத்துவமனைக்குள் ஓடினார். அதற்குள் தமாராவை, வாலிபர் சரமாரியாகச் சுட்டார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அவர் உயிரிழந்தார். இதனால் மருத்துவமனையில் பீதி ஏற்பட்டது. மருத்துவ பெண் உதவியாளரையும் அந்த வாலிபர் சுட்டார். இதில் அந்தப் பெண் உதவியாளரும் பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் போலீசாரை நோக்கியும் சரமாரியாகச் சுட்டார். இதில் ஒரு போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து போலீசுக்கும் அந்த வாலிபனுக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அந்த வாலிபன் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
(சாமுவேல் ஜிம்மன்ஸ்)
இதுபற்றி சிகாகோ போலீஸில் தலைமை செய்தி தொடர்பு அதிகாரி அந்தோணி கூறும்போது, ‘இங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் போலீஸ் அதிகாரி சாமுவேல் ஜிம்மன்ஸை இழந்துவிட்டோம். அதோடு இந்த நகரம் ஒரு மருத்துவரையும் மருத்துவ உதவியாளர் ஒருவரையும் இழந்துள்ளது. நாங்கள் மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. சமீபத்தில், புளோரிடா மாகாணத்தில் யோகா மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பிட்ஸ்பர்க் நகரில் ஜெபக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பரிதாபமாக பலியாயினர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தெலங்கானாவை சேர்ந்த ஒருவர் கார் திருடிய சிறுவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க மக்கள் அச்சத்தில் உள்ளனர்.