ஓடுபாதையை தாண்டி ஆற்றுக்குள் இறங்கிய விமானம்: பயணிகள் அலறல்
அமெரிக்காவில் ஆற்றுக்குள் விமானம் இறங்கியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அங்கோரேஜ் என்ற இடத்தில் இருந்து, உனாலஸ்கா தீவில் உள்ள டச்சு ஹார்பருக்கு பென் ஏர்வேஸுக்கு சொந்தவிமானம் சென்றது. விமானத்தில் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் உட்பட 38 பேர் இருந்தனர். விமானம், டச்சு ஹார்பர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தடுமாறியது. ஓடு பாதையை தாண்டியும் சென்ற விமானம் அருகில் உள்ள ஆற்றின் கரைக்குள் போய் முட்டி நின்றது. நல்லவேளையாக ஆற்றுக்குள் முழுவதுமாக இறங்கவில்லை. அதற்குள் விமானத்துக்குள் இருந்தவர்கள் கதறினர்.
இதையடுத்து விமான நிலைய ஊழியர்களும் தீயணைப்பு படையினர் விரைந்தனர். அவர்கள், விமானத்தில் சிக்கிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்டனர். இதில் 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.