
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையேயான போரில் பாலஸ்தீன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காசா நகரில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 2,125 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவில் முப்படை தாக்குதல் நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஆயிரத்து 300 யூதர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க காசாவின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் தெற்கு பகுதிக்கு செல்ல இஸ்ரேல் மூன்று மணி நேரம் இஸ்ரேல் அவகாசம் வழங்கியுள்ளது. மக்கள் கடந்துசெல்ல ஏதுவாக பைட் ஹலோன் - கான் யூனிஸ் வழித்தடத்தில் 3 மணி நேரத்துக்கு எவ்வித தாக்குதலும் நடத்தப்படாது எனவும் கூறியுள்ளது. இதனையடுத்து காசாவின் வடக்கு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். அதேபோல் எகிப்து எல்லை வழியாக செல்லவும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்துநிற்கின்றனர்.
இந்நிலையில் மேற்குக் கரை முழுவதும் பெரிய அளவிலான நடவடிக்கைகளின் மூலம் 49 பயங்கரவாத சந்தேக நபர்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் 33 பேர் ஹமாஸ் செயல்பாட்டாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இஸ்ரேலின் பீரங்கிகள் நூற்றுக்கணக்கில் காசாவின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
இது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், “பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான கைது நடவடிக்கையின் முடிவில் மேற்கு கரையில் உள்ள ஜூடியா மற்றும் சமாரியா நகரில் தேடப்படும் 49 நபர்கள் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 33 பேர் ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பின் செயல்பாட்டாளர்கள்" என தெரிவித்துள்ளது.