படகு மூலம் இலங்கையில் இருந்து தமிழகம் வந்த குடும்பம் - தீவிர விசாரணையில் 3 பேர்.!
கடன் தொல்லையால் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து வெளிநாடு தப்பி செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை நாகை மாவட்டம் கோடியக்கரை கடலோர காவல் குழும போலீசார் கைது செய்து ரகசிய விசாரணை செய்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் எல்லையை தாண்டி இலங்கையிலிருந்து படகு மூலம் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை இந்திய பாஸ்போர்ட் சட்டப்படி கடலோர குழும போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் இலங்கை திரிகோணமலை சோநகர் தெருவைச் சேர்ந்த முகமது அன்சார் மற்றும் அவருடைய மனைவி சல்மாபேகம், மகன் முகமது சுலைமான் என்பது தெரியவந்தது.
இவர்கள் கடன் தொல்லையால் தமிழகம் வந்து அங்கிருந்து வெளிநாடு தப்பி செல்ல முடிவெடுத்துள்ளனர். அதன்படி இலங்கையில் ஒரு படகை வாடகைக்கு எடுத்து நள்ளிரவு ஒரு மணியளவில் கோடியக்கரை வந்துள்ளனர். மூன்று பேரையும் கோடியக்கரை பழைய கலங்கரை விளக்கம் சவுக்குபிளாட் அருகில் கரை இறக்கி விட்டு இலங்கை படகு சென்று விட்டது.
இந்த நிலையில் ரகசிய தகவலின் பேரில் எல்லை தாண்டி இலங்கையிலிருந்து வந்த மூன்று பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இந்திய பாஸ்போட் சட்டப்படி கைது செய்து ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏன் வந்தார்கள்? எப்படி இவ்வளவு எளிதாக நாடு விட்டு நாடு வர முடிந்தது? போன்ற பல கேள்விகளுக்கு பதில்வேண்டி உளவுத்துறை போலீசாரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.