ஒரேநாளில் 3,00,000 மின்னல்கள்.. மிரண்டுபோன மக்கள்.. உலகை வியக்கவைத்த நாடு!
நெதர்லாந்தில், 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,00,000-க்கும் மேற்பட்ட மின்னல் வெடிப்புகள் (Lightning discharges) பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வுத் துறையான KNMI தெரிவித்திருப்பது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப அலை நிலவி வருகிறது. இதனால், நெதர்லாந்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக வெப்பநிலை 30°C முதல் 40°C வரை பதிவாகியிருந்தது. இதையடுத்து, அங்கு முதல்முறையாக 'கோட் ரெட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்த அதீத வெப்பமான சூழ்நிலையைத் தொடர்ந்து குளிர்ந்த காற்று உள்ளே நுழைந்ததையடுத்து, அங்கு வளிமண்டலத்தில் ஏற்பட்ட கடுமையான அழுத்த மாறுபாடுகள் மற்றும் காற்றில் இருந்த அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை இணைந்து, ஜூன் 28ஆம் தேதி ஒரு மகா மின்னல் புயலை (Supercell thunderstorm)உருவாக்கின.
இந்தப் புயல் அதன் உச்சக்கட்டத்தை எட்டியபோது, நெதர்லாந்து மற்றும் வடக்கு ஜெர்மனி பகுதிகளில் வெறும் 30 நிமிடங்களில் சுமார் 30,000 மின்னல்களை வெட்டின. அதாவது, ஒவ்வொரு நொடிக்கும் சுமார் 17 மின்னல் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. இதன்மூலம், 24 மணி நேர இடைவெளியில் மட்டும் துல்லியமாக 3,01,137 மின்னல் வெடிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தத் தகவலை, நெதர்லாந்து அரச வானிலை ஆய்வு நிறுவனம் (KNMI)உறுதிப்படுத்தியுள்ளது. நெதர்லாந்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு மின்னல் பதிவுகள் கணக்கிடத் தொடங்கப்பட்டதிலிருந்து, அனைத்துத் தரவுகளும் முழுமையாகச் சேர்க்கப்பட்டால் இந்தப் புயல் 5 லட்சம் மின்னல்களைத் தொட்டு புதிய சாதனை படைக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சுமார், நான்கு மணி நேரம் இந்த மின்னல் வெடிப்புகள் வானில் அழகாய்த் தோன்றினாலும், அதேநேரத்தில் பொதுமக்களுக்கு அச்சமூட்டுபவையாக இருந்தன.

