சொந்த நாட்டிலேயே டிரம்ப்க்கு எதிர்ப்பு.. சர்வதேச நீதிமன்றம் சென்ற 25 மாநிலங்கள்!
டிரம்ப் அதிபராக வந்ததும் 1974 வர்த்தகச் சட்டம் பிரிவு 301-ஐ பயன்படுத்தி இந்தியா, சீனா, கனடா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 60 நாடுகளிலிருந்து இறக்குமதி பொருட்களுக்கு 10% முதல் 12.5% வரை கூடுதல் சுங்க வரி விதித்தார். இதனால் அமெரிக்கா-வெளிநாடுகள் உறவு மோசமடைந்து, இறக்குமதி குறைந்து, விலைவாசி உயர்ந்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றவுடன் 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ஐப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்தார். அதிலும் குறிப்பாக இந்தியா, சீனா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% முதல் 12.5% வரை புதிய சுங்க வரிகளை விதித்தார். இதன் காரணமாக அமெரிக்காவுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் இடையே இருந்த உறவுகள் மோசமடைந்தது.
இறக்குமதி பொருள்கள் குறைந்தால் அமெரிக்காவில் பொருள்களின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, வணிகர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக நியூயார்க், கலிபோர்னியா, இலினாய்ஸ் உள்ளிட்ட 25 அமெரிக்க மாநிலங்கள் கூட்டாகச் சேர்ந்து அமெரிக்கச் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் (US Court of International Trade) வழக்கு தொடர்ந்துள்ளன.
அமெரிக்க அதிபருக்கு வரம்பற்ற சுங்க வரிகளை விதிக்க சட்டப்படி அதிகாரம் இல்லை என்றும், இதனால் அமெரிக்க மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் மாநிலங்கள் சார்பில் முறையிடப்பட்டுள்ளது.
அதோடு, இந்த வரிகளை உடனடியாகச் சட்டவிரோதம் என அறிவித்து தடை விதிக்க வேண்டும் என்றும், வணிகர்களிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட வரிகளை மீண்டும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் மாநிலங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இந்த புதிய சுங்க வரிகளுக்கு இடைக்காலத் தடை (Injunction) விதிக்குமா அல்லது டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைக்கு அனுமதி அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அமெரிக்க அதிபருக்கு எதிராக மாநிலங்கள் ஒருங்கிணைந்து நீதிமன்றம் சென்றுள்ளது டிரம்ப்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

