ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா - அமெரிக்காவில் 57,000 பேருக்கு புதிதாக தொற்று

ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா - அமெரிக்காவில் 57,000 பேருக்கு புதிதாக தொற்று
ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா - அமெரிக்காவில் 57,000 பேருக்கு புதிதாக தொற்று

உலகம் முழுவதும் ஒரே நாளில் புதிதாக 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரவி இருப்பது வைரஸ் பரவல் குறித்த கவலையை மேலும் அதிகரித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் அண்மை காலமாகவே மிக தீவிரமாக பரவி வருகிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்ரிக்க கண்டங்களில் வைரஸின் வீரியம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் உலகம் முழுவதும் புதிதாக 2 லட்சம் பேருக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டிருப்பது கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த 2 லட்சம் பேரில் ஒரு லட்சம் பேர் அமெரிக்கா மற்றும் பிரேசிலை சேர்ந்தவர்கள் என்பது மற்றொரு அதிர்ச்சி. அமெரிக்காவில் மட்டும் ஒரு நாளில் 57 ஆயிரத்து 236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 47 ஆயிரத்து 984 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இப்படி ஒரே நாளில் அதிகமானவர்கள் தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 21 ஆயிரத்து 948 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக ரஷ்யாவில் 6 ஆயிரம் பேருக்கும், தென் ஆப்ரிக்காவில் 8 ஆயிரம் பேருக்கும், மெக்சிகோவில் 5 ஆயிரம் பேருக்கும் என கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 2 லட்சத்து 8 ஆயிரத்து 864 பேருக்கு ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசிலில் முன்கூட்டியே பொதுமுடக்கத்தை தளர்த்தியதே அதிகளவில் வைரஸ் பரவ காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் 23 மாகாணங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவி வருவது வைரஸ் குறித்த அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com