உலகை உலுக்கிய ட்விட்டர் ஹேக்: மூளையாக செயல்பட்ட 17 வயது சிறுவன் கைது!
சமீபத்தில் ஹேக்கிங் மூலமாக பல்வேறு முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. அப்பிரபலங்களின் கணக்கில் க்ரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் மோசடிப் பதிவுகள் பகிரப்பட்டன. இந்த கணக்குகள் மூலமாக ஒரு லிங்க் கொடுக்கப்பட்டு, அந்த லிங்க் வழியாக அனுப்பப்படும் பணம், இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் ட்வீட் செய்யப்பட்டிருந்தது.
ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மாஸ்க், ஜோ பீடன், மைக் ப்ளூம்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், பிளாய்ட் மெவேதர் மற்றும் கிம் காதர்சியான் ஆகியோரின் ட்விட்டர்கள் உட்பல உலகமெங்கும் பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் இந்த ட்வீட்கள் வட்டமடித்தன .
பிறகு ட்விட்டர் நிறுவனம் போராடி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனாலும் இதன் மூலமாக பிட்காயின் வாலட்டில் குறைந்தது 300 பரிவர்த்தனைகள் வழியாக, $100,000 தொகை ஹேக்கர்களால் பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது. முக்கியப் பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதில் வெட்கப்படுகிறோம், ஏமாற்றமடைந்துள்ளோம், வருத்தம் தெரிவிக்கிறோம் என்று ட்விட்டர் நிறுவனம் கூறியது.
இந்த ஹேக்கிங் எப்படி நடந்தது என்பது பற்றி எஃப்.பி.ஐ விசாரணை நடத்தி வந்த நிலையில் ப்ளோரிடாவின் தம்பாவில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே 19 வயது மற்றும் 22 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த ஹேக்கின் மூளையாக செயல்பட்டது 17 வயது சிறுவன் என போலீசார் தெரிவித்துள்ளர். 30 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ள சிறுவனை தற்போது ப்ளோரிடா போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.