ஐநா சபையின் 122 நாடுகள் ஒன்று சேர்ந்து அணு ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றின. இது, அணு ஆயுதங்களுக்கு எதிரான வரலாறு காணாத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகத்தில் நடந்த மாநாட்டில், இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இம்மாநாட்டின் தலைவர் எலேய்ன் வொய்ட் கோம்ஸ் பேசுகையில், “அணு ஆயுதமற்ற உலகை ஏற்படுத்த விதை விதைத்துள்ளோம். இதன் மூலம் எங்கள் குழந்தைகள் அணு ஆயுதமற்ற உலகில் வாழும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
மேலும், இந்த வரைவுக்காக, உலகம் 70 ஆண்டுகளாக காத்திருந்தது. உலகின் முதல் அணுகுண்டு இரண்டாம் உலகப்போரின் இறுதியில் 1945 ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமா, நாகாசாகி மீது வீசப்பட்டதிலிருந்து இதற்காக காத்திருந்ததாக அவர் கூறினார். "ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு வீசப்பட்ட போது 13 வயது ஆகியிருந்த செட்சுகோ துர்லோ என்பவர், இனியொரு முறை இத்தகைய கொடுமை நிகழக் கூடாது என்பதற்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்தார்" என்றும் கோம்ஸ் தெரிவித்தார்.
ஆனால் இந்த ஒப்பந்தத்தை அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக அறியப்பட்டுள்ள ஒன்பது நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஆதரிக்கவில்லை. அவற்றின் கூட்டணி நாடுகளும் இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை. நெதர்லாந்து இந்த தீர்மானத்தைப் புறக்கணித்தது. சிங்கப்பூர் இத்தீர்மானம் மீது கருத்து தெரிவிக்காமல் தவிர்த்துவிட்டது.